பாட்டாளிக் கட்சியின் மூன்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் சகாவான ரயீசா கானிடம் நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் சொல்லிய பொய் சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என்று கூறினார்கள்.
பட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் எதிர்த்தரப்பு தலைவருமான பிரித்தம் சிங், பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம், துணைத் தலைவர் ஃபைசல் மானாப் ஆகிய மூவரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடந்த கூட்டத்தில் திருவாட்டி ரயீசா, தான் கூறிய பொய் தொடர்பில் விளக்கம் எதையும் அல்லது உண்மை எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியதாக திருவாட்டி ரயீசா கானும் கட்சியின் இதர உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அது பற்றி தனது செயலாளருக்கு திருவாட்டி ரயீசா கான் ஒரு செய்தி அனுப்பினார்.
"நான் பிரித்தம், சில்வியா, ஃபைசல் மூவரையும் இப்போது பார்த்தேன். இப்போது செய்ய வேண்டியது சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என்பதுதான் என அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்," என திருவாட்டி ரயீசா அந்தச் செய்தியில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உரிமைக் குழு மன்றத்தில் டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் பல விவரங்கள் அடங்கி இருக்கின்றன. அந்த அறிக்கை நாடாளுமன்ற இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.
உரிமைக் குழுவின் இரு நாள் விசாரணை விவரங்களும் அதில் இடம்பெற்று இருந்தன.
திருவாட்டி ரயீசாவும் அவருடைய செயலாளரான லோ பெய் யிங்கும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் சாட்சியம் அளித்தனர்.
தொண்டூழியரான யுதிஷ்த்ரா நாதன் வெள்ளிக்கிழமை சாட்சியமளித்தார். திருவாட்டி கானின் முன்னாள் நாடாளுமன்ற உதவியாளரான லிம் ஹங் லிங் வியாழக்கிழமை சாட்சியம் அளித்தார்.
தான் பொய் சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என்று கட்சித் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக திருவாட்டி கான் உரிமைக் குழுவிடம் அளித்த சாட்சியத்தில் கூறினார். திருவாட்டி ரயீசா கட்சியில் இருந்தும் செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகி உள்ளார்.

