வருடாந்திர தைப்பூசத் திருவிழா அடுத்த ஆண்டு தொடர்ந்து இரண்டாம் முறையாக கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்.
அடுத்த தைப்பூசம் ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமைகொண்டாடப்படும்.
கொவிட்-19க்கு முன்பு, பக்தர்கள் பால்குடம், காவடிகள் ஏந்தி சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்குப் பாத ஊர்வலமாக செல்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டில் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததால், தைப்பூசத் திருவிழாவில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதேபோல், அடுத்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிலும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்குப் பாத ஊர்வலமாக செல்வது அடுத்த ஆண்டு இடம்பெறாது. திருவிழா பிரார்த்தனைகள் தெண்டாயுதபாணி கோயிலுக்குள் மட்டும்தான் இடம்பெறும்.
அந்த வகையில் பால்குடப் பிரார்த்தனைகள் மட்டுமே இடம்பெறும். கோயிலில் தயாரிக்கப்பட்ட பால்குடங்கள் மட்டும்தான் பிரார்த்தனைக்குப் பயன்படுத்தப்படும். பால்குடம் எடுக்கும் பக்தர்கள் அதற்கான நேரத்தை முன்கூட்டியே இணையம் வழி பதிந்துகொள்ள வேண்டும். பால்குடம் எடுப்போருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களும் அதற்கான நேரத்தையும் முன்கூட்டியே இணையம் வழி பதிந்துகொள்ள வேண்டும்.
இணையத்தில் பதியப்படும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களும் இதர பொதுமக்களும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
முதியவர்களும் சிறார்களும் தைப்பூச விழாவின் நேரடி ஒளிபரப்பை வீட்டில் இணையத்தில் கண்டு அருள்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

