ஜெர்மனியின் உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான பாயர் ஏஜி, இப்போது நடுக்குவாத நோயைக் குணப்படுத்த உயிரணு, மரபணு சிகிச்சையை உருவாக்கி வருகிறது. அதற்கு ஆதரவாக சிங்கப்பூரில் புதிய உற்பத்தி ஆலையை அந்த நிறுவனம் அமைக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
உயிரணுவில் காணப்படும் ஒருவகை ரிபோநியூக்லிக் அமில (எம்ஆர்என்ஏ) மூலக்கூற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகள், சிகிச்சைகள் சம்பந்தப்பட்ட புதிய நிறுவனங்களுடன் பங்காளித்துவ உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு பற்றியும் தான் ஆராய்ந்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பாயர் ஏஜி தெரிவித்துள்ளது.
பயிர்கள் தொடர்பான அறிவியல் துறையில் சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக்குடன் பாயர் நிறுவனம் பங்காளித்துவ தொழில் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதற்கு மேலும் அது சிங்கப்பூரில் புதிய திட்டங்களில் ஈடுபட இருக்கிறது என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வார்னர் பாவ்மான் பேட்டியில் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்காகவும் பரந்த ஆசியான் வட்டாரத்திற்காகவும் தொழில்களை சிங்கப்பூரில் மேலும் எப்படி விரிவுபடுத்தலாம் என்பது பற்றி தொடர்ந்து தாங்கள் விவாதித்து வருவதாக அவர் கூறினார்.
நடுக்குவாதம் (பார்கின்சன்) என்பது மனித உடலின் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளால் உருவாகும் நோய். உலக அளவில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த நோயைக் குணப்படுத்த பாயர் நிறுவனம் சிகிச்சை முறையை உருவாக்கி வருகிறது.
அந்த முறைகள் இப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆய்வுக் கூடங்களில் ஏழு நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அவை இந்த ஆண்டு முடிவில் நிறைவடையும்.
நிறுவனம் அடுத்த முயற்சியை எடுக்க அப்போது தக்க தருணம் ஏற்படும். கூடுதலான உற்பத்தி ஆலையை எங்கு அமைக்கலாம் என்பது பற்றி அப்போது ஆராயவேண்டி இருக்கும் என்று பாயர் நிறுவன நிர்வாகி தெரிவித்தார்.