உருமாறிய கொவிட்-19 ஓமிக்ரான் தொற்றைக் கண்டறிவதற்கான சிங்கப்பூரின் முதலாவது பிசிஆர் பரிசோதனைக் கருவியை பயோ அக்கியூமன் குளோபல் (BioAcumen Global) என்ற உள்ளூர் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
'பயோஏ ஓமிக்ரான் கண்டறியும் கருவி' என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய சாதனம், குறிப்பாக ஓமிக்ரான் தொற்றைக் கண்டுபிடிக்கும்.
இதர உருமாறிய கிருமித்தொற்று இருக்கிறதா என்பதையும் அந்தக் கருவி மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்தப் பரிசோத னைக் கருவியைப் பயன்படுத்தும் ஒருவருக்கு மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்று கிடைக்கும்.
கொவிட்-19 தொற்று மற்றும் ஓமிக்ரான் தொற்று உள்ளது;
கொவிட்-19 தொற்று உள்ளது, ஓமிக்ரான் தொற்று இல்லை; கொவிட்-19 தொற்று இல்லை, ஓமிக்ரான் தொற்று இல்லை ஆகிய மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒரு முடிவு மூலம் தொற்று நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்.
இப்போது ஓமிக்ரான் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய பிசிஆர் கருவி பரிசோதனை மட்டும் போதாது. ஓமிக்ரான் தொற்று இருக்கிறதா என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்த தொடர்ந்து மரபணு பரிசோதனையும் நடத்த வேண்டும். இதற்கு கூடுதலாக ஒரு நாள் பிடிக்கும்.
புதிதாக வெளி வந்துள்ள கருவி மூலம் பரிசோதனை நடைமுறையை வேகமாக நடத்த முடியும் என்றும் இந்தப் பரிசோதனை மூலம் குளிர்சாதன ஏற்பாடு தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் புதிய பரிசோதனைக் கருவிகளைப் பெரியளவில் தயாரிக்க உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.
இது உள்ளூரிலும் இந்த வட்டாரத்திலும் இப்போதைய சூழ்நிலையில் மிக உதவியாக இருக்கும் என்று புதிய கருவியை உருவாக்கி இருக்கும் குழுவினர் நம்புகிறார்கள்.

