சிங்கப்பூர் குடும்பங்களுக்கு, கொவிட்-19 தொற்றுவதற்கு முன் இருந்ததைவிட இப்போது கடன் சுமை கூடி இருக்கிறது.
சொத்துச் சந்தை சுறுசுறுப்பாக இருப்பதே இதற்கான காரணம். ஆகையால் அடமானக் கடன்களை அடைப்பதற்கு எந்த அளவுக்கு தம்மால் முடியும் என்பதை குடும்பங்கள் மிகவும் கவனமாகக் கணக்கிட வேண்டும்.
ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் உள்ள குடும்பங்கள் மேலும் கடன் வாங்கக்கூடாது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆலோசனை கூறி இருக்கிறது. ஆணையம் நேற்று தனது வருடாந்திர நிதி நிலைப்பாட்டு மறுபரிசீலனை அறிக்கையை வெளி யிட்டது.
சிங்கப்பூரின் தனியார் சொத்துச் சந்தை சூடுபிடிக்கிறது. இந்த ஆண்டின் முதல் 10 மாதத்தில் இடம்பெற்ற புதிய தனியார் வீடு விற்பனை 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் நடந்த விற்பனையைவிட அதிகம் என்பது நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகின்றன.
கொவிட்-19 தொற்று சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் தலைகாட்டியதற்குப் பிறகு தனியார் வீட்டு விலை 8.7 விழுக்காடு கூடி இருக்கிறது.
இது, பணவீக்கத்திற்கு முந்தைய சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட 5.3% வளர்ச்சியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், மொத்த உள்நாட்டு வருவாயில் விகிதாச்சார அடிப்படையில் பார்க்கையில், குடும்பங்களுக்கான கடன் சுமை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 70 விழுக்காடாக உயர்ந்தது.
இது ஓராண்டுக்கு முன் 67.1% ஆக இருந்தது.
கணக்கிட்டுப் பார்க்கையில் குடும்பத்தின் கடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 6.8% கூடி இருக்கிறது. அதற்கேற்ப குடும்பங்களின் கடன் அடைப்பு சுமைகளும் கூடியிருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.
பொருளியல் அடுத்த ஆண்டு முழுவதும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் தொற்று காரணமாக தொடர்ந்து நிச்சயமில்லாத நிலை நிலவலாம் என்ற கணிப்பும் இருக்கிறது.
இந்த நிலையில், கடன் வாங்குவோரும் கடன் கொடுப்போரும் தொடர்ந்து விவேகமாக நடந்துகொள்ளவேண்டும்.
விழிப்புடன் இருந்துகொள்ள வேண்டும் என்று நாணய ஆணையம் ஆலோசனை கூறியது.
பெரிய அளவில் புதிதாக கடன் வாங்கி அதை அடைப்பது தங்களுக்குக் கட்டுப்படியாகுமா என்பதை குடும்பங்கள் மிக முக்கியமாக பரிசீலிக்க வேண்டும்.
குறிப்பாக வட்டி விகிதம் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் குடும்பங்கள் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நாணய ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
அதிக கடன் சுமை உள்ள குடும்பங்கள் மேலும் கடன் வாங்கக் கூடாது என்றும் அந்த அறிக்கை ஆலோசனை கூறி உள்ளது.
நாணய ஆணையம் வருடாந்திர நிதி நிலைப்பாட்டு மறுபரிசீலனை அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
சிங்கப்பூர் நிதித் துறைக்கு ஏற்படக்கூடிய இடர்களையும் அந்தத் துறை அதிர்ச்சிகளைத் தாங்க எந்த அளவுக்கு ஆற்றலுடன் இருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை ஆண்டுதோறும் மதிப்பிடுகிறது.
சிங்கப்பூரின் வங்கி நிறுவனத் தொழில்துறை, குடும்பங்கள் ஆகியவற்றுக்கான நிதி இடர் அட்டவணை என்ற ஓர் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு அந்த மதிப்பீட்டை ஆணையம் செய்து வருகிறது.
வட்டி கூடும் நிலையில் புதிதாக கடன் வாங்குவதில் மிகவும் கவனம் தேவை என அறிவுரை

