முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரயீசா கான் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையைப் பற்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கவே சிறப்புரிமைகள் குழு அதன் சிறப்பு அறிக்கையை வெளியிட்டது என்று நாடாளுமன்ற அலுவலரின் செயலகம் நேற்று தெரிவித்தது.
கடந்த வாரம் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களன்று நடந்த விசாரணையில் வாய்மொழியாகத் திரட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் சாட்சியம் அளிக்காத நிலையில், சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அதன் முடிவு குறித்துக் கேள்விகள் எழுந்ததை அடுத்து நாடாளுமன்ற அலுவலரின் செயலகம் இவ்வாறு தெரிவித்தது.
"விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை நாடாளுமன்றத்திற்குச் சிறப்புரிமைகள் குழு தெரிவித்து வரும். பின்னர், இறுதி அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும்," என்றது செயலகம்.
நாடாளுமன்ற நிலை ஆணை 105(2) படி, விசாரணை நடந்துவரும் காலகட்டத்தில் எந்நேரத்திலும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக நாடாளுமன்றத்திற்குத் தெரிவிப்பதற்காக சிறப்புரிமைகள் குழு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடலாம் என்பதைச் செயலகம் மேற்கோள் காட்டியது.
இத்தகைய சிறப்பு அறிக்கைகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பொய் உரைத்ததாக ஒப்புக்கொண்ட திருவாட்டி கான், தமது கட்சியிலிருந்தும் செங்காங் குழுத்தொகுதி எம்.பி. பதவியிலிருந்தும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று விலகினார். அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தொடர்பில் சிறப்புரிமைகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
புகார் தொடர்பான எந்த ஒரு விவகாரத்தையும் அலசி ஆராய்வதே குழுவின் கொள்கை. தனக்கு முன் வைக்கப்படும் ஆதாரங்களையும் சமர்ப்பிப்புகளையும் குழு தொடர்ந்து மறுஆய்வு செய்துவரும் என்றும் கூறப்பட்டது.
நாடாளுமன்றம் (சிறப்புரிமைகள், விலக்குரிமைகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் எம்.பி.க்கள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய வேறு நபர்களின் நடத்தை ஒழுங்குபடுத்தப்படும்.
இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக எந்நேரத்திலும் சாட்சியம் அளிப்பதற்காக யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு முன்னிலையாக குழு ஆணையிடலாம் என்று செயலகம் விளக்கியது.
தேவை ஏற்படின் புகார் தொடர்பிலான விசாரணையைத் தொடர்வதுடன் மேற்கொண்டு ஆதாரங்களைக் குழு கேட்டறியலாம் என்று கூறப்பட்டது. திங்கட்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமையின் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
சிறப்புரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று தாம் உரைத்த பொய்யை திருவாட்டி கான் தொடரவேண்டும் என்று அவருக்குப் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங், பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம், பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவர் ஃபசால் மானாப் ஆகியோர் கூறியதாக திருவாட்டி கான் அளித்த வாக்குமூலம் அதில் இடம்பெற்றிருந்தது.
கடந்த வியாழக்கிழமையன்று பாட்டாளிக் கட்சியின் செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்களிலிருந்து இது மாறுபட்டிருந்தது.
தாம் கூறிய பொய்க்கு திருவாட்டி கான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தாம் கூறியது பொய் என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தாம் அறிவுறுத்தியதாக அக்கூட்டத்தில் திரு சிங் கூறியிருந்தார்.
நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழுவின் பணிகள் இன்னமும் தொடர்வதால், பாட்டாளிக் கட்சித் தலைவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கட்சி பதிலளிப்பது முக்கியம் என்று நேற்று முன்தினம் பாட்டாளிக் கட்சி தெரிவித்தது.
அத்துடன் வியாழக்கிழமையன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், சிறப்புரிமைகள் குழு முன்னிலையில் தாம் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக திரு சிங் கூறியிருந்ததையும் கட்சி நேற்று முன்தினம் மீண்டும் வலியுறுத்தியது.
நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் சிறப்புரிமைகள் குழுவின் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

