சிங்கப்பூரர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் திறன்களை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி) அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. முதல்முறையாக 'எதிர்காலப் பொருளியலுக்குத் தேவைப்படும் திறன்கள்' அறிக்கை என்ற ஒன்றை நேற்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வெளியிட்டார்.
மின்னிலக்கம், பசுமை, பராமரிப்புத் துறைகளில் 20 திறன் தொகுப்புகளை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அந்தத் திறன்கள் அடுத்த ஓராண்டு முதல் மூன்றாண்டுகளில் மூன்று துறைகளுக்கும் அவசரமாகத் தேவைப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
'எதிர்காலப் பொருளியலுக்குத் தேவையான திறன்கள் கருத்தரங்கு' நிகழ்வில் தமது தொடக்கவுரையுடன் அமைச்சர் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
முழுப் பொருளியலையும் அறிக்கை உள்ளடக்கவில்லை என்றாலும் நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் துறைகளாக விளங்கும் அந்த மூன்று துறைகளின் வேலைகளையும் திறன் போக்குகளையும் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைச்சர் கூறினார்.
"இன்று 17 துறைகளிலுள்ள 450க்கும் மேற்பட்ட வேலைகளுக்குப் பசுமை தொடர்பான திறன்கள் பணியின்போது தேவைப்படுகின்றன. மூப்படையும் சமூகம் பெரிதாகிவரும் நிலையில், பராமரிப்புப் பொருளியலில் உள்ளூர் ஊழியர்களுக்கான தேவை தொடர்ந்து வேகமாக அதிகரிக்கும்.
"வளர்ச்சி அடையும் துறைகளை நாம் அடையாளம் காண்பதற்காக இங்கு வரவில்லை. வெவ்வேறு துறைகளில், வெவ்வேறு வேலைகளில் தேவைப்படும் திறன் தொகுப்புகளை மக்கள் அறிந்து திட்டமிடுவதை நாம் முக்கியமாக கருதுகிறோம்," என்றார் திரு சான்.
மின்னிலக்கத் துறையைப் பொறுத்தவரை, தொழில்நுட்பப் பயன்பாடு, தகவல் பகுப்பாய்வு, சந்தை ஆய்வு ஆகியவை ஆக அதிகமாகத் தேவைப்படும் திறன்களாக உள்ளன.
பசுமைத் துறையில் சுற்றுப்புற பாதிப்பைக் குறைக்கும் வடிவமைப்பு, கரிம நிர்வாகம், சுற்றுச்சூழல் நிர்வாக முறை ஆகிய திறன்களை அறிக்கை குறிப்பிடுகிறது.
பராமரிப்புத் துறையில் திட்ட ஆக்கம், நியதிகள், பங்குதாரர்கள் நிர்வாகம், எல்லாரையும் உள்ளடக்கும் நடைமுறைகள் ஆகியவை திறன்களாக கூறப்படுகின்றன.
அந்த மூன்று துறைகளையும் மேலும் உட்பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் தேவைப்படும் முன்னுரிமைத் திறன்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கை 16 மென் திறன்களை 'முக்கிய மூலாதார திறன்கள்' என்று குறிப்பிட்டுள்ளது.
விமர்சன ரீதியாகச் சிந்திப்பது, மற்றவர்களுடன் கலந்துறவாடுவது, என்றென்றும் ஏற்புடைய வகையில் திகழ்வது ஆகிய மூன்று தொகுப்புகளாக அவை வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
அறிக்கையை எஸ்எஸ்ஜி வரும் ஆண்டுகளில் விரிவுபடுத்தும் என்று திரு சான் குறிப்பிட்டார்.

