பலரும் அறிந்த தஞ்சோங் காத்தோங் காம்பிளக்ஸ், புதுப்பிப்புப் பணிக்காக 2023ஆம் ஆண்டின் பிற்பாதியில் மூடவுள்ளது. கேலாங் சிராய் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு கடைத்தொகுதியாக விளங்கும் அது, புதுப்பொலிவு பெறும் என்று கூறப்படுகிறது.
வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவும் கேலாங் சிராய் வட்டாரத்தின் உருமாற்ற மேம்பாட்டையொட்டியும் புதுப்பிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகளில் உணவகங்களுக்கான கூரைத் தளப் பகுதி ஒன்றும் அடங்கும்.
ஏறத்தாழ 37 ஆண்டு பழைமை வாய்ந்த இக்கட்டடத்தில் சமூகத் திட்டங்களுக்காக கூடுதல் இடவசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் சிங்கப்பூர் நில ஆணையம் (எஸ்எல்ஏ) நேற்று தெரிவித்தது.
கட்டடத்தின் கலாசார, மரபுடைமையை அதிகரிக்கும் அம்சங்களில் மாற்றம் ஏதும் இருக்காது என்று ஆணையம் குறிப்பிட்டது. அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் குத்தகைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், கட்டடத்தின் 106 குத்தகைதாரர்களுக்கும் மேலும் ஆறு மாதக் கால நீட்டிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இடம்மாற கூடுதல் நேரம் கிடைப்பதுடன் நோன்புப் பெருநாள் காலத்தில் மேலும் அதிக விற்பனை செய்து பலனடைய இது அவர்களுக்கு வழி ஏற்படுத்தித் தரும் என்று எஸ்எல்ஏ குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் மலாய்/முஸ்லிம் சமூகத்தினரின் தேவைகளுக்கு ஏற்ப பலதரப்பட்ட கடைகளைக் கொண்டது தஞ்சோங் காத்தோங் காம்பிளக்ஸ்.
தற்போது கட்டடத்தின் இயந்திர, மின்சார அமைப்புமுறைகள் பழையவை என்றும் உடனடியாக அவை மாற்றப்பட வேண்டும் என்றும் எஸ்எல்ஏ தெரிவித்தது.

