சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து கடந்த மாதம் 21ஆம் தேதி வரை ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட $1.4 பில்லியன் மதிப்பிலான திட்டங்கள் தொடர்பான செலவுக்காக, எதிர்பாராத செலவுக்கான நிதியிலிருந்து நிதி அமைச்சு முன்பணம் எடுத்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆதரவு நடவடிக்கைகளைத் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நடைமுறைப்
படுத்த எதிர்பாராத செலவுக்கான நிதியிலிருந்து அரசாங்கம் பணம் எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாண்டுக்கான வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருப்பதால் ஆதரவு நடவடிக்கைகளுக்கான நிதியைப் பெற சிங்கப்பூரின் கையிருப்பிலிருந்து பணம் எடுக்கத் தேவையில்லை என்று அமைச்சர் வோங் கூறினார்.
எதிர்பாராத செலவுக்காக கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது அரசாங்கம் $13 பில்லியன் ஒதுக்கியது.
அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், எதிர்பாராத செலவுகளுக்கு நிதி திரட்ட நாடாளுமன்றம் புதிய நிதிகளை உருவாக்கலாம்.
எதிர்பாராத செலவுக்கான நிதியிலிருந்து முன்பணம் எடுப்பதற்கு அதிபரின் ஒப்புதல் தேவை.
"இந்த விவகாரம் குறித்து அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் தெரிவித்தோம். எதிர்பாராத செலவுக்கான நிதியிலிருந்து முன்பணம் எடுக்க அவர் ஒப்புதல் வழங்கினார்," என்றார் திரு வோங்.
"கொவிட்-19 நெருக்கடி
நிலையை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். ஓய்வின்றி கடுமையாக உழைத்துவரும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
"ஒவ்வோர் அமைப்பு, ஒவ்வோர் அதிகாரியின் முயற்சி விலைமதிப்பற்றது. அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.

