பொதுவான காப்புறுதித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள், கொவிட்-19 சூழலைக் கையாள தனது வாடிக்கையாளர்களுக்குத் தரும் உதவியை இம்மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்திக்கொள்ளும் என்று ஜிஐஏ எனப்படும் பொதுக் காப்புறுதிச் சங்கம் தெரிவித்துள்ளது. காப்புறுதி நிறுவனங்கள் வழங்கிவரும் உதவியின்கீழ் தங்களின் காப்புறுதித் திட்டங்களுக்கான சந்தா தொகையைச் செலுத்த கிருமிப் பரவல் சூழலால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்.
எனினும், ஏற்கெனவே இத்தகைய நீக்குப்போக்கான காப்புறுதித் திட்டங்களை வைத்திருந்தோருக்கு அவற்றின் காலம் முடியும்வரை உதவி தொடர்ந்து வழங்கப்படும். அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் கிருமிப் பரவல் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகள் அல்லது உதவி குறித்து தங்ளுக்குக் காப்புறுதித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசிக்கலாம். இம்மாதம் 31ஆம் தேதிவரை தொடர்ந்து நீக்குப்போக்கான காப்புறுதித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
"கிருமிப் பவலைச் சகித்துக்கொண்டு வாழும் நிலையை நோக்கி சிங்கப்பூர் சென்று கொண்டிருப்பதால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் இச்சூழலைச் சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் என்றும் தயாராய் இருப்போம்," என்று பொதுக் காப்புறுதிச் சங்கத்தின் தலைவர் கிரெய்க் எல்லிஸ் கூறினார்.

