அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியின் கழிவறையில் ஐந்து வயது சிறுமி தனது கைகளைக் கழுவிவிட்டு அவற்றைக் காயவைத்துக்கொண்டிருந்தபோது, அந்த இயந்திரத்தில் விரல் சிக்கித் துண்டானது. திங்கட்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தின்போது அச்சிறுமி, தம்முடைய இல்லப் பணிப்பெண் மற்றும் ஒன்பது வயதிலான இரட்டை சகோதரிகளுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
கழிவறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டபோது சிறுமியின் தந்தைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.
மகளுக்கு ஒரு விரல் போய்விட்டது என்று பணிப்பெண் அவரிடம் வந்து சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் கழிவறைக்குள் ஓடினர். அங்கு காரா என்ற அந்தச் சிறுமி, தமது கையைப் பிடித்தவாறு அலறிக்கொண்டிருந்தார்.
இதுவரை சிறுமிக்கு இரு முறை அறுவை சிகிச்சை நடந்துவிட்டதாக தந்தை திரு சியா தெரிவித்தார். இதனால் இடது ஆள்காட்டி விரல் இருக்கவேண்டிய இடத்தில் வெறும் தட்டையாக உள்ளது.
விரலில் கட்டுடன் சிறுமி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அத்துடன் வலியைப் போக்க மருந்தும் உட்கொண்டு வருகிறார். தங்களின் மகளது மனநலன் குறித்து தற்போது அவரின் பெற்றோர் கவலைப்படுகின்றனர். அடுத்து என்ன செய்வது என்பதை இருவரும் ஆலோசித்து வருகின்றனர்.
"தைரியமாக இருப்பதுபோல் தன்னைக் காட்டிக்கொள்கிறார். அவரின் கையைப் பின்னால் மறைத்துக்கொள்கிறார். நடந்தது அவருக்கு இன்னும் முழுமையாக விளங்கவில்லை," என்று திரு சியா தம் மகளைப் பற்றி கூறினார்.
கழிவறையில் கைகளை உலர்த்தும் இயந்திரம் இயங்கியபோதும் அதன் காற்றோட்ட மூடியைக் காணவில்லை என்று மூன்று மகள்கள், எட்டு வயது மகனுக்குத் தந்தையான திரு சியா குறிப்பிட்டார்.
சாதனம் பொருத்தப்பட்ட பகுதியைத் திறப்பதற்கான சாவியைக் கடைத்தொகுதியின் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் துண்டான சிறுமியின் விரல் பகுதிகளை எடுப்பதற்காக பணியாளர்கள் தங்கள் கைகளால் அதைத் திறக்க வேண்டியிருந்தது என்று திரு சியா கூறினார்.
கைகளைத் துடைப்பதற்கான திசுத் தாளை எடுப்பதாக நினைத்து சிறு பிள்ளைகள் தவறுதலாகத் தங்களின் கைகளைச் சாதனத்திற்குள் விட்டு காயமடையலாம் என்று குறிப்பிட்டார் திரு சியா. சம்பவத்தை அடுத்து சாதனத்தை மாற்றிவிட்டதாகக் கடைத்தொகுதி பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதாகவும் கூறினார்.

