பன்முகக் கலாசாரம், நல்லிணக்கம் ஆகிய அம்சங்களில் சிங்கப்பூர் எந்நேரமும் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், இணையம், சமூக ஊடகங்கள் வழி, வெளிநாடுகளில் நடப்பவை மின்னல் வேகத்தில் நம்மை வந்தடைகின்றன என்றார் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.
வெளிநாடுகளில் நடப்பவை முதலில் நமது அனுபவங்களுக்கும் நாட்டின் சமூகச் சூழலுக்கும் ஏற்ப உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னர் அவற்றை இங்கு பின்பற்றலாம் என்றார் அவர்.
"வெளியில் சென்று மற்றவர்களின் கலாசாரங்களையும் பார்வைகளையும் அறியும் நிலையில், ஆவணங்களை வாசிக்கும்போது கோட்பாடுகள், மாதிரிகள், கட்டமைப்புகள் ஆகியவற்றை நாம் எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருப்பது முக்கியம்," என்றார் திரு ஸாக்கி.
வருடாந்திர நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒன்பீப்பிள்.எஸ்ஜி மாடல் யுனைடெட் நேஷன்ஸ்' தொடக்க விழாவில் இனங்களின் உறவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் திரு ஸாக்கி பேசி இருந்தார்.
'பிளேக் லைஃப்ஸ் மேட்டர்' போன்ற சமூக இயக்கங்கள் ஏன் வெளிநாடுகளில் உருவாகின என்பதை மதிப்பிடுவது முக்கியம் என்றார் அவர்.
"இணையத்தில் நீங்கள் படிக்கும் பலவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு சூழலில் நாம் இருக்கிறோம்," என்று அவர் சொன்னார்.
தாம் மலாய் இனத்தவர் என்பதால் காற்பந்து விளையாடுவதில் திறமைசாலி என்றும் தமது தோல் ஏன் வெளுப்பாக உள்ளது என்றும் சிலர் தம்மைக் கேட்டிருப்பதை அவர் உதாரணம் காட்டினார்.
"அறியாமை, கலாசார வேறுபாடுகளை அறியாமல் இருப்பதைத் தான் நான் காரணமாகக் கூறுவேன். மற்ற கலாசாரங்களையும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்வதில் நாம் மேலும் ஆர்வம் காட்டலாம்," என்றார் அமைச்சர் ஸாக்கி. இருப்பினும் தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபடும் ஒரு சிலரைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
"இனங்களுக்கு இடையிலான உறவை நாம் மேம்படுத்திக்கொள்ள, பலதரப்பட்ட நமது இன, சமயச் சமூகங்களுடன் மேலும் ஆழமான தொடர்புகளை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டார் அமைச்சர் ஸாக்கி.
சிங்கப்பூர் இளையர்களிடையே இன, சமய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக 'ஒன்பீப்பிள்.எஸ்ஜி மாடல் யுனைடெட் நேஷன்ஸ்' அமைப்பு 2015ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
ஏழாவது ஆண்டாக நடைபெறும் இம்மூன்று நாள் நிகழ்வில் இவ்வாண்டு 300க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி, உயர்கல்வி நிலைய, மதராசா பள்ளி மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

