கொவிட்-19 ஆதரவு மானியத்தில் இருந்து தொகை கோரும் நோக்கில் தான் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கும் போலி ஆவணம் ஒன்றை 48 வயது ராஜகோபால் மாலினி தயாரித்தார்.
மேலும், அவர் வேலை பார்த்த கூட்டுரிமை வீட்டு குடியிருப்பாளர்கள், பராமரிப்புக்காக தந்த பணத்தையும் அவர் கையாடினார்.
அத்துடன், திருடப்பட்ட கடன் அட்டையைக்கொண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாலினி தன்னுடைய பிள்ளைகள், நண்பர்களுடன் கடை கடையாகச் சென்று பொருள்கள் வாங்கியிருந்தார்.
பல்வேறு குற்றம் புரிந்த மாலினிக்கு நேற்று 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கூட்டுரிமை வீட்டுவாசிகளிடமிருந்து மாலினி கிட்டத்தட்ட $4,000க்கும் மேற்பட்ட தொகையைக் கையாடியதாக கண்டுபிடிக்கப்பட்டது. கடன் அட்டையைக் கொண்டு வாங்கிய பொருள்களின் மதிப்பு $13,500க்கும் மேலானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாலினி தன்னுடைய மகள்களுடனும் தன்னுடைய பிள்ளைகளின் நண்பர்களுடனும் நெக்ஸ் கடைத்தொகுதிக்குச் சென்று கைப்பேசிகள், கடிகாரங்கள், காலணிகள் உள்பட பல பொருள்களை அந்தக் கடன் அட்டையைக் கொண்டு வாங்கினார்.
தன் பிள்ளைகள் மீது அன்பைப் பொழியவே வசதி குறைந்த மாலினி இவ்வாறு செய்ததாக அவரின் வழக்கறிஞர் கூறினார்.

