கைத்தொழிலைத் திறம்பட கற்று அதைக் காசாக்கி வாழும் ஊழியர்கள் எப்போதுமே காலத்திற்கு ஏற்ற வர்களாக இருந்து வரவேண்டியது மிக முக்கிய மானது. கால ஓட்டத்திற்கு, மாற்றத்திற்கு ஏற்ப பொருளியலின் பல்வேறு துறைகளும் தொடர்ந்து உருமாறிக்கொண்டேதான் இருக்கும்.
ஆகைல் ஊழியர்கள் காலத்திற்கு ஏற்ற தேர்ச்சி, திறமை, ஆற்றல் கெட்டிக்காரத்தனத்துடன் எப்போதுமே தங்களுக்குத் தேவை இருக்கும் வகையில் இருந்து வந்தால்தான் அனுகூலமான முறையில் வேலையைத் தக்கவைத்துக்கொண்டு கண்ணியமான முறையில் கடைசிவரை காலம் தள்ள முடியும்.
இப்போதைய உலகம் கொவிட்-19 பிடியில் இருக்கிறது. இன்னமும் விடுபட்டு வெளியே வர இயலவில்லை. உலகையே புரட்டிப்போட்டுவிட்ட அந்தக் கிருமி, ஊழியர்கள் இதுநாள்வரை வேலை செய்து வந்த விதத்தையும் பாணியையும் மாற்றி இருக்கிறது.
தொழில்துறைகளை இன்னமும் தலைஎடுக்க விடாமல் செய்துவிட்டது. இதுநாள்வரை இருந்துவந்த பல வேலைகள் இனியும் இருக்காது என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுவிட்டது.
வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் பாணி நிரந்தரமாகக்கூடிய சூழலும் வரக்கூடும் என்பது பற்றியும் உலகம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது.
குறிப்பிட்ட வேலைகள் மறைந்துவிடும் என்ற சூழல் ஒரு பக்கம் இருக்கையில், பொருளியலில் எந்தெந்த துறைகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்பதிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள், மாற்றங்கள் இருக்கும் போல் தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், எதிர்காலத்தில் எந்தத் துறைக்கு எந்த அளவுக்குத் தேவை கூடும், எந்தத் துறைக்கு என்ன என்ன புதிய ஆற்றல்கள், தேர்ச்சிகள், திறமைகள் தேவைப்படக்கூடும் என்பதைத் துல்லியமாகக் கணித்துச் செயல்படவேண்டிய மிக முக்கியமான தேவை இருக்கிறது என்பதை ஊழியர்கள் முதலில் உணரவேண்டும்.
இதில் ஒருமித்த கவனம் செலுத்தவேண்டிய காலம் இது என்ற உண்மை நிலவரத்தை அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.
தங்களின் இப்போதைய தேர்ச்சிகள் வரும் காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை 64.5 விழுக்காட்டு ஊழியர்களிடம் அவ்வளவாக இல்லை என்பது அண்மைய ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டாக வேண்டும் என்பதை ஊழியர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்; தங்களிடம் இப்போது இருக்கும் தேர்ச்சிகள் போதாது என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பதை அந்த ஆய்வு காட்டி உள்ளது.
சிங்கப்பூரில் ஊழியர்கள் காலத்திற்கு ஏற்ற புதிய தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு நிதி உதவியுடன் உதவிக்கரம் நீட்டி உறுதுணையாக இருந்துவரும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் இயக்கம், இதன் தொடர்பில் இப்போது ஊழியர்களை விழிப்பூட்டி இருக்கிறது. அந்த அமைப்பு 'வருங்கால பொருளியலுக்கான தேவை அறிக்கை' என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
பெருளியலின் 23 துறைகளையும் அந்த அறிக்கை உள்ளடக்கவில்லை என்றாலும்கூட சிங்கப்பூரில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும் மூன்று துறைகளை அடைளம் கண்டு, அந்தத் துறைகளில் எந்தெந்த தேர்ச்சிகள் தேவைப்படும் என்பதை அந்த அமைப்பு வரையறுத்து உள்ளது. ஊழியர்கள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டிய அவசர தேவை உள்ள தேர்ச்சிகளை 20 தொகுப்புகளாக அது தொகுத்து உள்ளது.
மின்னிலக்கம், பசுமை, பராமரிப்பு ஆகிய மூன்று துறைகளும் சிங்கப்பூருக்கு மிக முக்கியமான துறைகள் என்று குறிப்பிட்டு இருக்கும் அந்த அறிக்கை, அந்தத் துறைகளில் ஊழியர்கள் நல்ல வேலைகளைப் பெறுவதற்குத் தேவைப்படும் தேர்ச்சிகளில் ஒருமித்த கவனம் செலுத்தி இருக்கிறது.
ஊழியர்கள் இதுநாள்வரை தாங்கள் பெற்றுள்ள அனுபவமும் தேர்ச்சியும் ஆற்றலும் விருப்பங்களும் வருங்காலத்தில் எந்த அளவுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்த அறிக்கை வழிகாட்டி உதவக்கூடியதாக இருக்கிறது.
மின்னிலக்கப் பொருளியலைப் பொறுத்தவரை, பொருளியலின் அனைத்து துறைகளும் உருமாறுவதால் மின்னிலக்கம் என்பது ஏறக்குறைய எல்லா துறைகளுக்குமே அவசியமானதாக ஆகிவிட்டது.
இந்தத் துறையில் சிங்கப்பூரர்களுக்கு உள்ள வளர்ச்சி வாய்ப்புகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பசுமைப் பொருளியலைப் பொறுத்தவரை, அதனுடைய 17 பிரிவுகளில் உருவாகக்கூடிய வேலைகளுக்குத் தேவைப்படக்கூடிய, தவிர்க்க இயலாத தேர்ச்சிகளை அறிக்கை சுட்டி இருக்கிறது.
மற்றொரு துறை பராமரிப்பு. சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைகிறது. இளம் பெற்றோர்களின் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய தேவை கூடுகிறது. வேலை பாணி மாறுகிறது.
சுகாதாரத் துறையில் தொலைதூர சிகிச்சை போன்ற புதுப்புது பாணிகள் தலையெடுக்கின்றன.
இவை எல்லாம் ஏற்புடைய, பொருத்தமான தேர்ச்சி களைக் கொண்ட சிங்கப்பூரர்களுக்கான தேவையை அதிகரிக்கிறது.
சிங்கப்பூரர்கள் அனுகூலமான வேலையைப் பெற வேண்டுமானால் அவர்கள் பயிற்சிகளில் தொடர்ந்து ஒருமித்த கவனம் செலுத்தி வரவேண்டும். அதன் மூலம் தங்கள் தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டு வரவேண்டும். இதுவே அவர்களின் இப்போதைய தொடக்க முயற்சிக இருக்கவேண்டும்.
பொருளியல் சூழ்நிலை மந்தமாக இருக்கும்போது அந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிறந்த வருங்காலத்திற்கு ஊழியர்களை ஆயத்தமாக்குவதே சிங்கப்பூரின் அணுகுமுறைக இருந்து வந்துள்ளது. அந்த அணுகுமுறையே கொவிட்-19 தொற்று ஏற்படுத்தி இருக்கும் இப்போதைய பாதகமான காலகட்டத்திலும் தொடர்கிறது.
இதில் மிக முக்கியமானது சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைத்து விரும்பிய பலனை எட்டவேண்டும். ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல பயிற்சி வழங்குவோரும் தங்கள் பாடத்திட்டங்களை மேம்படுத்திக்கொண்டு, கற்றுக்கொள்பவர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.
முதலாளிகள் தங்களுடைய புதிய தொழில் பாணிகளை, முன்மாதிரிகளைச் சூழ்நிலைகேற்ப விரைவாகக் கைக்கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில், பாதகத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, காலத்திற்கேற்ற வகையில் மேம்பட்டு, எப்போதுமே தங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதை ஊழியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்கான வாய்ப்பு இப்போது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் கைகூடிவருகிறது.

