இன ரீதியிலான குற்றங்களைக் கையாளுவதற்காக உருவாகி வரும் சட்டம், சிங்கப்பூரில் பல கலாசாரங் களுக்கு இடையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
மலாய்/முஸ்லிம் உள்ளிட்ட இங்குள்ள சமூகங்கள் செய்து வரும் தியாகங்களினால் பல இன நல்லிணக்கம் தொடர்ந்து பேணி பலப்படுத்தப்பட்டு வந்துள்ளதை அவர் சுட்டினார்.
'இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்' என்ற அந்தப் புதிய உத்தேச சட்டம் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஆகஸ்ட்டில் தேசிய நாள் பேரணியில் அது பற்றி அறிவித்தார்.
வெவ்வேறான இனக் குழுக்களுக்கு இடையில் சகிப்புத்தன்மையையும் மிதவாத போக்கையும் ஊக்கமூட்டுவது அந்தப் புதிய சட்டத்தின் நோக்கம்.
இனப் பிரச்சினைகளைக் கையாளக்கூடிய இப்போதைய எல்லா சட்டங்களையும் ஒன்றுதிரட்டி புதிய சட்டம் உருவாக்கப்படும்.
மலாய்/முஸ்லிம் தலைவர்களுடன்கூடிய ஒரு பேட்டியில் திரு மசகோஸ் இந்த விவரங்களைத் திங்கட்கிழமை தெரிவித்தார்.
தேசிய தினப் பேரணியில் பிரதமர் இது பற்றி குறிப்பிட்டது, இதன் தொடர்பில் அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டு இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் திரு மசகோஸ் கூறினார்.
இங்குள்ள சமூகங்கள் செய்துள்ள தியாகங்களின் காரணமாக எல்லாருக்குமான பொதுவான வாய்ப்புகள் உருவாக உதவி கிடைத்து வந்துள்ளது என்பதையும் அவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் இன, சமய பாரபட்சத்திற்கு இடம் கிடையாது என்று சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான திரு மசகோஸ் வலியுறுத்திக் கூறினார்.

