சிங்கப்பூரில் புதிய சமூக குற்றச்செயல் தடுப்பு செயல்திட்டம் நேற்று தொடங்கியது.
காவல்துறையின் 'சமூக கண்காணிப்புத் திட்டம்' என்ற அந்தத் திட்டம் அக்கம்பக்க கண்காணிப்பு மண்டலம், வாகன கண்காணிப்பு, வாகன ஓட்டுநர் கண்காணிப்பு போன்ற இப்போதைய கண்காணிப்புக் குழுக்களை ஒருங்கிணைக்கும்.
குற்றச்செயல் பற்றிய எச்சரிக்கைகளைச் சுடச்சுட தெரிந்துகொள்ள விரும்புவோரும் காவல்துறையிடம் குற்றச்செயல் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோரும் அந்தச் செயல்திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். அந்தத் திட்டத்தின்கீழ், தொண்டூழியர்களுக்குப் பல்வேறு தகவல்களும் குறித்த காலத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
குற்றச்செயல்களுக்கு எதிரான ஆலோசனைகள், பல நடவடிக்கைகளில், பயிற்சிகளில், பயிலரங்குகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்.
காவல்துறையிடம் இருந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். அதேவேளையில், பொதுமக்கள் குற்றச்செயல் தொடர்பான தகவல்களை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.
புதிய திட்டத்தில் இப்போது தொண்டூழியர்கள் சேர்வதற்கு ஆறு குழுமங்கள் இருக்கின்றன.
அவை அன்றாட வாழ்க்கையின் பரந்த ஐந்து அம்சங்களை மையமாகக் கொண்டவை. வீடு, வேலை/கற்பது, போக்குவரத்து, வாழ்க்கைப் பாணி, இணையம் ஆகியவை அந்த ஐந்து அம்சங்கள்.
இந்தத் திட்ட உறுப்பினர்கள் மேலும் செயல்பட விரும்பினால் 'சுற்றுக்காவலில் குடிமக்கள்' அல்லது 'தொண்டூழிய சிறப்புக் காவலர்கள்' போன்ற இதர திட்டங்களில் அவர்கள் சேர்ந்துகொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு அல்லது தொண்டூழியராகச் சேர்வதற்கு police.gov.sg/volunteer என்ற இணையத்தளத்துக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம் தொடங்கியதை அடுத்து பிரகாஷ் குலசேகர், 55, என்ற தொண்டூழியர் தொண்டூழியத் திட்டம் தொடர்பான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அங் மோ கியோ தெற்கு அக்கம் பக்க காவல் நிலையத்துடன் கூடிய 'சுற்றுக்காவலில் குடிமக்கள்' என்ற திட்டத்தில் தொண்டூழியராகச் சேவையாற்றும் இவர், சில இளைஞர்கள் சரியான பாதைக்குத் திரும்ப தான் உதவியது எப்படி என்பதைப் பகிர்ந்துகொண்டார்.
காவல் துறையுடன் சேர்ந்து தொடர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபட தான் ஆர்வமாக இருப்பதாகவும் திரு பிரகாஷ் குலசேகர் குறிப்பிட்டார்.

