தை ஹுவா குவான் பான் உடற்குறையாளர் விடுதியைச் சேர்ந்த 25 பேர் ரொட்டி தயாரிப்பது எப்படி என்பதைக் கற்று வருகிறார்கள்.
'அன்பு கலந்த ரொட்டி' என்ற அந்தச் செயல்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் ரொட்டிகள் பொதுமக்களுக்கும் விற்கப்படுகின்றன. இதன் மூலம் எதிர்கால வேலை வாய்ப்புகளும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
இப்போது அவர்கள் தயாரிக்கும் ரொட்டிகள், 'தை ஹுவா குவான் தார்மீக அறநிறுவனம்' என்ற அமைப்பு நடத்தும் மூன்று விடுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த அறநிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நேற்று நடந்தது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அதன் ஒரு பகுதியாக ரொட்டி பயிற்சி செயல்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்த அறநிறுவனம், அடுத்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் குறைந்த வருவாய்க் குடும்பங்களுக்கு மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுகளைக் கொடுக்க உள்ளது. அதற்காக அறநிறுவனம் $100,000 நிதி திரட்டுகிறது.
பொதுமக்கள் அடுத்த மாதம் 1ஆம் தேதி வாக்கில் பெருநடை, சைக்கிளோட்டம், ஓட்டம் மூலம் மொத்தமாக 10,000 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து இந்த அறப்பணியில் உதவலாம்.
இந்தத் தொலைவு இலக்கு நிறைவேறினால் அறநிறுவனம் $100,000 பணம் கொடுக்கும். டிசம்பர் 1ஆம் தேதி இந்த இயக்கம் தொடங்கியது. பொதுமக்கள் Giving.sg என்ற இணையத்தளம் மூலம் ரொக்க நன்கொடை தந்தும் உதவலாம்.

