கணினி ஊடுருவிகளின் பார்வை சிங்கப்பூர் பக்கம் திரும்பி வருகிறது.
குறிப்பாக, கணினியை முற்றிலும் செயலிழக்கச் செய்தோ அல்லது தரவுகளைப் பயன்படுத்த முடியாதவாறு முடக்கியோ பணம் பறிக்கும் இணையத் தாக்குதல்காரர்கள் மற்ற நாடுகளைவிட சிங்கப்பூரை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
ஊடுருவிகள் தாக்கும் உலக நாடுகளின் பட்டியலில் 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிங்கப்பூர் 44வது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் முதல் பாதியில் 21வது இடத்துக்கு சிங்கப்பூர் நகர்ந்து உள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் சிங்கப்பூர் 11வது இடத்தைப் பிடித்துள்ளது என்று இணையப் பாதுகாப்பு நிறுவனமான டிரெண்ட் மைக்ரோ கூறியது.
'ரான்சம்வேர்' என்று அழைக்கப் படும் கணினி ஊடுருவில்கள் கணினி கட்டமைப்பு அல்லது தரவு களைப் பயன்படுத்த முடியாமல் சிறிய மென்பொருள் மூலம் முடக்கிவிடுகின்றனர். இவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர அவர்கள் ஏராளமாக பணம் கேட்கின்றனர்.
இவர்களுடைய தாக்குதலால் பாதிக்கப்படும் நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் புதிய உச்சத்தை நோக்கி இடம்பிடித்து வருவதை டிரெண்ட் மைக்ரோ நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
உலகின் பல பெரிய நிறுவனங்கள் செயல்படுவதால் மோசடி கும்பலின் இலக்கு சிங்கப்பூரை நோக்கி திரும்பியிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
பிரிட்டனும் இதில் விதிவிலக்கல்ல. அந்நாடும் 21லிருந்து 20க்கும் பின்னர் 4வது இடத்துக்கு வந்துள்ளது. ஆனால் சில நாடுகள் பட்டியலில் கீழ் இறங்கியுள்ளன.
உதாரணமாக, 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2வது இடத்தில் இருந்த பிரேசில் ஒரு வருடத்திற்குப் பிறகு 12வது இடத்துக்குச் சரிந்து இவ்வாண்டின் முதல் பாதியில் 14வது இடத்துக்கு முன்னேறியது.
மலேசியா, 27வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு முன்னேறி பின்னர் 28வது இடத்துக்கு இறங்கியது.
உலகம் முழுவதும் பணம் பறிக்கும் ஊடுருவல் சம்பவங்களும் இதே காலக்கட்டத்தில் 36,728ல் இருந்து 43,481க்கும் பின்னர் 69,603க்கும் அதிகரித்துள்ளன.
இணையத் தாக்குதல்காரர்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தங்களுடைய இலக்குகளை மாற்றக் கூடும் என்று கூறிய டிரெண்ட் மைக்ரோவின் ஆசிய பசிபிக் வட்டார மிரட்டல் குறித்த ஆய்வுப் பிரிவின் மூத்த நிர்வாகியான ரையான் ஃபுளோரஸ், பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல பெரிய நிறுவனங்களும் அலுவலகங்களும் இங்கு செயல்படுவதே அதற்கு காரணம் என்றார்.
"கணினி ஊடுருவில்கள் தேர்ந்தெடுத்து செயல்படுகின்றனர். சிறிய நிறுவனங்களுக்கு அவர்கள் குறி வைத்தனர். தற்போது நடுத்தர அல்லது அதற்கும் மேலான பெரிய நிறுவனங்களுக்கு அவர்கள் இலக்கு வைக்கின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்.
தற்போதைய சூழலில் பல நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகி வருவது கணினி ஊடுருவல்காரர்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது என்றார் அவர்.

