சிங்கப்பூரில் தனக்குப் பதிலாக தரை வீட்டை வாங்குவதற்காக சிங்கப்பூரர் ஒருவரை நியமித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் 39 வயது சீன நாட்டைச் சேர்ந்த சென் ஸியோபு.
வெளிநாட்டவரான அவர் சிங்கப்பூரில் தரை வீடு போன்றவற்றை வாங்க அரசாங்க அனுமதி பெற வேண்டும்.
ஆனால் 2014ல் அங் மோ கியோவில் கட்டுப்படுத்தப்பட்ட வட்டாரத் தில் உள்ள எண் 220 பெல்கிரேவியா பங்ளாவை சிங்கப்பூரரான சோங் ஃபன்ரோங், 49 மூலம் அவர் வாங்க முயற்சி செய்ததாகக் கூறப் படுகிறது.
அவர் மீது குடியிருப்பு சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 49 வயது சோங் ஃப்ரோங் என்ற மாதும் இதேபோன்ற மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
வெளிநாட்டவராக இருப்பதால் சிங்கப்பூரில் சொந்தப் பெயரில் வீடு வாங்க முடியாது என்று சோங் சென்னிடம் கூறியதாக வர்த்தக விவகாரப் பிரிவின் விசாரணையில் தெரிய வந்தது என்று காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தனது பெயரில் வீடு வாங்கி பின்னர் நிரந்தரவாசி அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று சென்னுக்கு சோங் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.
இதை ஏற்றுக் கொண்டு வீடு வாங்க ஒரு பகுதி பணத்தை சோங்குக்கு கொடுத்தாக சென் கூறியுள்ளார். இதையடுத்து சோங் வீட்டை வாங்குவதற்கான ஏற்பாடு களை செய்தார்.
கட்டுப்படுத்தப்பட்ட வட்டாரங்களில் தரை வீடு, பங்களா போன்ற வீடுகளை வாங்க விரும்பும் வெளிநாட்டவர்கள் அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற சிங்கப் பூர் நில ஆணையத்தின் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.
வீட்டை வாங்குபவர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிங்கப்பூர் நிரந்தரவாசியாக இருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் பொருளியலுக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சோங் தனக்குள்ள தொடர்பு மூலம் சிங்கப்பூர் நிரந்தரவாசி அல்லது குடியுரிமை பெற உதவி செய்வதாக தங்களை தவறாக வழிநடத்தியதாக சென்னும் வாங் செங், லியு குவோஹுய் ஆகிய இருவரும் சோங் மீது உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் வழக்குத் தொடுத்தனர்.
சென், வாங் மற்றும் லியு ஆகிய மூவரும் நண்பர்கள். சொத்து மூலம் பல மில்லியன் பணத்தைச் சேர்த்துள்ளனர்.
இதற்கிடையே பாசிர் பஞ்சாங், ரோச்சஸ்டர் டிரைவ் உள்ளிட்ட இடங்களில் 'பட்டர்கப்ஸ்' என்ற பெயரில் எட்டு மழலையர் பள்ளி களையும் உட்லண்ட்ஸ், காலாங்கில் பாலர் பள்ளிகளையும் சோங் நடத்தி வந்தார். சிங்கப்பூரில் குடியேற ஒரு நிறுவனத்தில் 500,000 வெள்ளி முதலீடு செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் உதவி செய்வதாகக் கூறியதால் சோங்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மூவரும் கூறினர்.
ஆனால் உண்மையில் குறைந்தபட்சம் 50,000 வெள்ளி முதலீடு மட்டுமே தேவை என்பதை பின்னர் மூவரும் உணர்ந்துகொண்டனர்.
நேற்று நீதிமன்றத்தில் பேசிய சென்னின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் மோசடியால் பாதிக்கப்பட்டதாகவும் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இல்லையென்றால் சென் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப் படுவதாக மாலையில் வெளியாகும் சீன நாளேடு குறிப்பிட்டது.

