பதின்ம வயது இளைஞர் ஒருவர் தனக்கு கொவிட்-19 கிருமி தொற்றிவிட்டதாகவும் அதனை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் சேர்க்கப்படுவதாகவும் விளை யாட்டுத்தனமாக கடந்த மே மாதத்தில் பொய்த் தகவல் அனுப்பினார்.
ஆனால் சியூ ஹான்லோங் என்ற அந்த இளைஞர் (படம்) அனுப்பிய அந்தப் பொய்ச்செய்தி விபரீதத்தில் முடிந்துவிட்டது. அவருடன் அணுக்கத் தொடர்பில் இருந்த ஒருவர் தெக்கோங் தீவில் தேசிய சேவை ஆற்றிக்கொண்டு இருந்தார்.
அவர் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு தனிமையில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த ராணுவ வீரர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது,
இதனால் பயிற்சிக் கால அட்டவணை பாதிக்கப்பட்டது. சியூவுக்கு இப்போது வயது 19. அவர் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் சென்ற மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் ஒன்பது மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதன்படி அவர், அன்றாடம் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்கவேண்டும். 40 மணி நேரம் சமூகச் சேவையாற்ற வேண்டும்.
சியூவின் நன்னடத்தையை அவரின் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். இல்லை எனில் அவர்கள் $5,000 தொகையை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

