புதிய 'சிங்கப்பூர்' பாக்டீரியா சிற்றினம் கண்டுபிடிப்பு
மருத்துவர்கள் குழு ஒன்று, புதிய பாக்டீரியா சிற்றினம் ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறது. அதற்கு சிங்கப்பூர் எனும் சொல்லைக்கொண்டு பெயரிடப்பட்டு இருக்கிறது.
பொதுவாக லேசான தோல் மற்றும் காயம் முதல் கடுமையான ரத்த ஓட்ட தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை சிற்றினத்தைச் சேர்ந்த அந்தப் புதிய 'எஸ். சிங்கப்பூரன்சிஸ்' என்ற பாக்டீரியா, 'எஸ். ஓரியுஸ்' என்ற பேரினத்தைச் சேர்ந்தது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு பற்றி அக்டோபர் 26ஆம் தேதி அனைத்துலக பரிணாம நுண்ணுயிரியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
அந்தப் பேரினக் குழுமத்தில் வெவ்வேறான நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை ஏறக்குறைய ஒத்த மரபணு இயல்புகளைக் கொண்டவை. சிங்கப்பூர் பாக்டீரியா கிருமி அடையாளம் காண்பதற்காக ஆய்வுக் குழுவினர் 2019 ஏப்ரலுக்கும் 2019 ஜூன் மாதத்திற்கும் இடையில் ஆய்வுக்கூட பாக்டீரியா கிருமிகளை ஆராய்ந்தனர்.
அவற்றில் ஆறு ஆய்வுக்கூட பாக்டீரியா கிருமிகள் ஒரு புதிய சிற்றினத்தை அதாவது 'சிங்கப்பூர் பாக்டீரியா கிருமி' என்ற சிற்றினத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியானது.
சிங்கங்கள் முற்றிலும் குணம்
சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூண்டில் இருந்து தப்பி வெளியே வந்த இரு சிங்கங் களுக்கு துப்பாக்கி மூலம் மயக்கமருந்து செலுத்தப்பட்டது.
அந்தச் சிங்கங்கள் மயக்கத்தில் இருந்து முற்றிலும் தெளிந்துவிட்டன. அந்தச் சிங்கங்கள் உட்பட மொத்தம் ஏழு சிங்கங்கள் வெளிநாட்டில் உள்ள ஓர் இடத்திற்கு அனுப்பப்பட இருந்தன. அவை எங்கிருந்து வந்தன, எங்கு செல்ல இருந்தன என்ற விவரங்கள் தெரியவில்லை.
அவை மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் கால்நடை மற்றும் தடுத்துவைப்புக் குழுவின் கண்காணிப்பில் மண்டாயில் இருக்கின்றன. இதனிடையே, சிங்கங்களை ஏற்றிச் செல்ல இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சம்பவம் பற்றி புலன்விசாரணை நடப்பதாகத் தெரிவித்தது.
பங்ளாதேஷ் ஊழியர் பலி
எண் 900 பிடோக் நார்த் ரோடு முகவரியில் உள்ள பிடோக் ரெசர்வோர் பார்க்கில் உள்துறைக் குழு தேசிய சேவையாளர்களுக்காக மனமகிழ்மன்றம் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டுமான வேலை இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று பாரம் தூக்கி மூலம் பல எஃகு தண்ட வாளங்கள் சேர்த்துக் கட்டப்பட்டு மேலே தூக்கப்பட்டன.
அப்போது அந்தக் தண்டவாளங்கள் திடீரென்று பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் மீது விழுந்துவிட்டன. அந்தச் சம்பவத்தில் அந்த 31 வயது ஊழியர் மாண்டுவிட்டார். சம்பவம் பற்றி மனிதவள அமைச்சு புலன் விசாரணை நடத்திவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை விளக்கம்
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், பாலியல் கொடுமைச் சம்பவம் பற்றியும் அதன் தொடர்பில் காவல் நிலையத்திற்குச் சென்றது தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
அது பற்றி புலன்விசாரணை நடத்த கணிசமான வளங்களைக் காவல்துறை ஒதுக்கவேண்டி இருந்தது என்று அது தெரிவித்துள்ளது. ரயீசா கான் அப்படி தெரிவித்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள், புகார் பதிவுகளை இரண்டு முறை முற்றிலும் பரிசோதித்தனர்.
கடந்த 2017 ஜனவரி 1ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் உள்ள எல்லா காவல் நிலையங்களுக்கும் சென்றவர்கள் பற்றிய அனைத்து தகவல்கள் உட்பட எல்லாவற்றையும் அதிகாரிகள் அலசி ஆராய்ந்ததாக காவல்துறை திங்கட்கிழமை அறிக்கையில் கூறியது.

