அனுமதி இல்லாமல் பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் வாக்குமூலம் ஒன்றில் கையெழுத்திட மறுத்ததாகவும் கில்பர்ட் கோ என்ற உள்ளூர் ஆர்வலர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும்.
அந்த 60 வயது ஆடவர் மே 1ஆம் தேதி குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையக் கட்டடம் அருகே ஒரு பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
'இந்தியாவில் இருந்து வரும் எல்லா விமானங்களையும் அன்புகூர்ந்து தடை செய்யுங்கள். நாங்கள் இனவாதி அல்ல. இது வெறும் எச்சரிக்கைதான்' என்று அந்தப் பதாகை தெரிவித்தது.
அதேநாளன்று தான் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தன் படத்துடன் ஃபேஸ்புக்கில் அந்த ஆடவர் பதிவேற்றினார்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை புலன்விசாரணை நடத்தியது. அப்போது வாக்குமூலத்தில் கையெழுத்திட அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக செவ்வாய்க்கிழமை கோ கடுமையாக எச்சரிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தான் எதிர்நோக்கும் இரண்டு குற்றச்சாட்டுகள் பற்றி அவர் ஃபேஸ்புக்கில் எழுதினார்.
குற்றச்சாட்டுகளை எதிர்த்து சிறைச்சாலைக்குச் செல்வேன் என்று அதில் அவர் குறிப்பிட்டார்.

