தாங்கள் தயாரிக்கும் தேன், கொவிட்-19 கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்துவரும் தேன் விற்பனை நிறுவனம் ஒன்றை சிங்கப்பூர் உணவு முகவை விசாரித்து வருகிறது.
'நேச்சுரல் ஒயில்டு ஹனி' என்ற அந்த நிறுவனம், இந்தோனீசியாவைச் சேர்ந்த தேனை விற்பனை செய்து வருகிறது.
ஒருவர் தன் நிறுவனத்தின் 12 போத்தல் தேனைச் சாப்பிட்டால் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து 18 நாட்களிலேயே குணமடைந்துவிடலாம் என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.
அப்படி குணமடையவில்லை என்றால் 12 போத்தல் தேனுக்கும் உரிய $800 தொகையைத் திருப்பிக் கொடுக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்குப் பதிலளித்த உணவு முகவை, அந்த நிறுவனம் இவ்வாறு விளம்பரப்படுத்தியதைத் தான் அறிந்திருப்பதாகவும் இதன் தொடர்பில் அந்நிறுவனம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது.
இதனிடையே, அந்த நிறுவனத்தின் இயக்குநரான ரிச்சர்ட் டியோ, 70, தனது நிறுவனம் விளம்பரப்படுத்துவது உண்மை என்று தெரிவித்தார்.
"நான் மக்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். இப்படி விளம்பரப்படுத்தக்கூடாது என்று சிங்கப்பூர் உணவு முகவை கூறுவது நியாயமல்ல. முகவை முதலில் எனது தேனை கொவிட்-19 நோயாளிகளிடம் தந்து பரிசோதித்துப் பார்க்கவேண்டும்," என்று திரு ரிச்சர்ட் டியோ கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

