அனுமதி இல்லாமல் பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கில்பர்ட் கோ (படம்) என்ற உள்ளூர் ஆர்வலர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த 60 வயது ஆடவர், மே 1ஆம் தேதி காலாங் ரோட்டில் இருக்கும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையக் கட்டடம் அருகே ஒரு பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
'இந்தியாவில் இருந்து வரும் எல்லா விமானங்களையும் அன்பு கூர்ந்து தடை செய்யுங்கள். நாங்கள் இனவாதி அல்ல. இது வெறும் எச்சரிக்கைதான்' என்று அந்தப் பதாகை தெரிவித்தது.
அத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்த அவர் அனுமதி பெறவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. பிடோக் போலிஸ் பிரிவு தலைமையகத்தில் காவல்துறையிடம் மே 11ஆம் தேதி தான் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் கையெழுத்திட கோ மறுத்துவிட்டதாகவும் நேற்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனிடையே, கில்பர்ட் கோ வழக்கறிஞரை அமர்த்தி விசாரணை கோருவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. அவருக்கு $5,000 பிணை அனுமதிக்கப்பட்டது. வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

