சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை நேற்று அதன் ஆகப்புதிய எச்225எம் ரக ஹெலிகாப்டரின் ஆற்றல்களை காட்சிப்படுத்தியது.
அந்த ஹெலிகாப்டர், சூப்பர் பூமா ஹெலிகாப்டரைவிட அதிக எடையைச் சுமந்து செல்லும். அதிக நேரம் பறக்கும். நீண்டகாலத்திற்குச் சேவையாற்றும். புதிய ஹெலிகாப்டர், சூப்பர் பூமா வுக்கு பதில் சேவையில் ஈடுபடும்.
மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் முதல் தேடுதல், மீட்புப் பணிகள் வரை பலதரப்பட்ட சவால்மிக்க பணிகளில் திறம்பட ஈடுபடும் வகையில் புதிய ஹெலிகாப்டர் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
செம்பவாங் விமானத் தளத்தில் நேற்று எச்225எம் ஹெலிகாப்டரில் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் பறந்து சென்று பார்த்தார்.
ஏர்பஸ் நிறுவனம் எச்225எம் ஹெலிகாப்டர்களை உருவாக்குகிறது. இந்த ஹெலிகாப்டரில் 20 பேருக்கும் அதிக வீரர்கள் செல்லலாம். மருத்துவ ஆதரவுடன் கூடிய 11 படுக்கைகளுக்கு இடமுண்டு. 4,750 கிலோ எடையுள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லும்.
சூப்பர் பூமா ஹெலிகாப்டர்களைவிட ஏறத்தாழ 20% அதிகமாக 400க்கும் அதிக கடல்மைல் தூரம் பறக்கக்கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு.

