மாற்று புரதச்சத்து உணவை விரும்புவோருக்கு உற்சாகமளிக்கும் வகையில் மேலும் செயற்கை கோழி இறைச்சி வகைகளை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகிலேயே முதல் நாடாக விலங்குகளின் உயிரணுக்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட இறைச்சியை விற்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வரின் 'ஈட் ஜஸ்ட்ஸ் குட் மீட்' (Eat Just's Good Meat) என்ற புதிய நிறுவனம், சோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட 'சிக்கன் நக்கட்ஸ்' துண்டுகளை விற்க அனுமதி கேட்டது. அதற்கு கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் உணவு அமைப்பு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் கோழி மார்புத் துண்டு உள்ளிட்ட இறைச்சி வகையை அடுத்த ஆண்டில் இருந்து விற்க அந்நிறுவனத்துக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.
அடுத்த வாரம் ஜேடபிள்யூ மேரியட் சிங்கப்பூர் சவுத் ஹோட்டலில் புதிய இறைச்சியை சுவைத்துப் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து கோழி மார்புத் துண்டுகள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்.
தியோங் பாருவில் உள்ள கரி ரைஸ், லூஸ் ஹைனானிஸ், சில ஈரச்சந்தை கடைகள் உட்பட பல உணவகங்களுக்கு இந்த இறைச்சி விநியோகிக்கப்படவிருக்கிறது.
உயிரணு இறைச்சி உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் 'குட் மீட்' கடப்பாடு கொண்டுள்ளது.
இதற்காக, தயாரிப்புச் சாதனங்களிலும் உபகரணங்களிலும் அது முதலீடு செய்கிறது.
"பொருளியல் வளர்ச்சிக் கழகம் முதல் குடிமக்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு வரை விவேகமான, நீடித்த உணவு முறையில் உலகிலேயே சிங்கப்பூர் முன்னோக்கிச் சிந்திக்கும் நாடு," என்று 'குட் மீட்' பேச்சாளர் ஒருவர் பாராட்டினார். முன்பு விற்கப்பட்ட சிக்கன் நக்கட்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாக அவர் சொன்னார்.