கொவிட்-19 கொள்ளைநோய் வாட்டி வதைத்த சிரமமான காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுக்கு இங்குள்ள அனைத்துலக சமூகத்தினர் தோள் கொடுத்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள், குடும்பங்களைப் பிரிந்திருத்தல் எனக் கொள்ளைநோயால் அதே அனைத்துலக சமூகத்திற்கும் சிரமங்கள் பல இருந்தன என்றார் அவர்.
அழுத்தம் தரும் இச்சூழலில் பொருளியல் நிச்சயமற்ற நிலையால் உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் கவலை உச்சக்கட்டத்தை எட்டியது.
சிங்கப்பூரின் முதல் அனைத்துலகப் பள்ளியாகத் திறக்கப்பட்ட 'யுனைடெட் வோர்ல்டு காலேஜ் ஆஃப் சவுத் ஈஸ்ட் ஏஷியா'வின் 50வது ஆண்டு நிறைவு விழாவில், பதிவுசெய்யப்பட்ட காணொளி வழி தோன்றி பிரதமர் லீ இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இப்பள்ளியில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,600 மாணவர்கள் டோவர், தெம்பனிஸ் வளாகங்களில் பயில்கின்றனர். 1971ல் 'சிங்கப்பூர் இண்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பெயரில் முதல் பிரதமர் லீ குவான் இயூ பள்ளியைத் திறந்து வைத்தார்.
நாட்டின் பொருளியலுக்கும் சமுதாயத்திற்கும் பங்களித்துள்ள சிங்கப்பூரின் அனைத்துலக சமூகத்திற்கு நேற்று பிரதமர் லீ நன்றி தெரிவித்ததுடன் அவர்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் வரவேற்கப்படுவதாகவும் மதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பள்ளியின் வெற்றியுடன் சிங்கப்பூரின் வளர்ச்சியும் மேம்பாடும் பின்னிப் பிணைந்துள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் திறக்கப்பட்டதால் அனைத்துலக இயக்கமாக பள்ளி மாற முடிந்தது என்றார் நிகழ்வில் பேசிய பள்ளியின் தலைவரும் முன்னாள் பிரிட்டிஷ் தூதருமான கார்மா எல்லியட்.
அனைத்துலகமயம், புரிந்துணர்வு இரண்டையும் நாடுகளுக்கிடையே ஊக்குவிப்பதையும் வளர்ப்பதையும் பள்ளி அதன் இலக்குகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

