போக்குவரத்துச் சாதனங்களாலும் வேலையிடத்தில் உயிர்ச்சேதம்
கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் பதிவாகும் உயிர்க்கொல்லி வேலையிட விபத்துகளுக்கு போக்குவரத்துச் சாதனங்களும் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன.
இந்நிலையில், மனிதவள அமைச்சு அக்டோபர், நவம்பர் மாதங்களில் போக்குவரத்துச் சாதனங்களின் பாதுகாப்பு தொடர்பில் அமலாக்கச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
வேலையிடத்தில் போக்குவரத்தின் நிர்வாகம் மற்றும் வாகனங்களை இயக்குவது தொடர்பாக அமைச்சின் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
போக்குவரத்து மற்றும் சரக்குச் சேமிப்பு, உற்பத்தி, கட்டுமானத் துறைகள் என மொத்தம் 730 வேலையிடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிட்டத்தட்ட 2,150 விதிமீறல்கள் இந்நடவடிக்கை வழி கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் ஆறு தரப்புகளுக்குப் பணி நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
சாதனங்களை இயக்கும் சாவியை முறையாக நிர்வகிக்கவும் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் தவறியது, வேலையிடத்தில் வாகனங்களையும் சாதனங்களையும் நகர்த்துவதை முறையாக நிர்வகிக்கத் தவறியது, வாகனங்கள் அல்லது சாதனங்களின் முறையான பராமரிப்பை உறுதிசெய்யத் தவறியது போன்றவை அதிகமாகக் காணப்பட்ட விதிமீறல்களாக இருந்தன.
ஊழியர்களின் பாதுகாப்பே முக்கியத்துவம் வாய்ந்தது என்றிருக்க, இத்தகைய விதிமீறல்களால் அவர்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் அபாயகரமான நிலையில் உள்ளதாக அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியது.
வேலையிடங்களில் வாகனங்களின் பாதுகாப்பான பயன்பாட்டை அனைத்து முதலாளிகளும் உறுதிசெய்ய வேண்டும் என்று அது அறிவுறுத்தியுள்ளது.
வாகனங்கள் அல்லது சாதனங்களின் பயன்பாட்டின்போது ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்டறிய முறையான மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.
முறையான போக்குவரத்து நிர்வாகத் திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துதல், அனைத்து வாகனங்கள் மற்றும் சாதனங்களின் பராமரிப்பை அடிக்கடி மேற்கொள்வதுடன் அதை ஒழுங்காகச் செய்தல், வாகனங்களையும் சாதனங்களையும் இயக்குவதற்கு முறையாகப் பயிற்சி பெற்ற அல்லது சான்றிதழ் பெற்ற ஊழியர்களே அனுமதித்தல் ஆகியவற்றை அமைச்சு வலியுறுத்தியது.

