புதிய உள்ளூர் கதைப்புத்தகம் ஒன்றை வாசிக்கும் சிறாருக்கு ஒலி, ஒளி அனுபவங்களைத் தர தத்ரூபமான சூழலைக் காட்டும் (Augmented Reality) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அத்
துடன் கையில் இருக்கும் நூல் வாசித்து காட்டப்படும்.
இந்தப் புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தும் 'மை ஃபேவரட் டேஸ்' எனும் தலைப்பு கொண்ட சிறுவர் கதைப்புத்தகம் நேற்று
மத்திய பொது நூலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தக் கதைநூலை லாப நோக்கமற்ற அமைப்பான டச் சமூகச் சேவைகள், அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகம், தொழில்நுட்ப நிறுவனமான மேட்டா, புத்தாக்க தொழில்நுட்ப நிறுவனமான மெஷ் மைண்ட்ஸ் ஆகியவை இணைந்து உருவாக்கின.
கதைநூலில் உள்ள படங்களை இல்லோ பிக்டோ எனும் நிறுவனம் வரைந்தது.
ஒரு சிறுமியும் அவளது தாத்தாவும் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் செல்வதே இந்த நூல் சொல்லும் கதை.
அத்துடன் தொழில்நுட்பத்தைக் கொண்டு வாழ்வின் தரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை கதைநூல் கோடிட்டுக் காட்டுகிறது.
நூலில் உள்ள ஐந்து காட்சிகள் கேலிச்சித்திரமாகக் காட்டப்படுகின்றன. கேலிச்சித்திரத்தைப் பார்க்க அந்தந்த பக்கங்களில் உள்ள கியூஆர் குறியீட்டை வாசகர்கள் வருடலாம்.
அதையடுத்து, தங்கள் ஃபேஸ்புக் பக்கம் வழியாக கேலிச்சித்திரத்தை அவர்கள் கண்டு களிக்கலாம்.
கதைநூலின் அறிமுக விழாவில் அறிவார்ந்த தேசம் மற்றும் இணையப் பாதுகாப்புக்குத் தலைமை தாங்கும் அமைச்சரான ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார்.
ஒருவரின் கற்றல் அனுபவத்துக்கு வாசிப்பு தொடர்ந்து முக்கிய அடித்தளமாக இருக்கிறது என்றார் அவர்.
"புதிய தலைமுறையினரின் தேவைகள், ஆர்வங்கள், ஈடுபாடு ஆகியவற்றுக்கு ஏற்ப கதைப்புத்தக வாசிப்பும் உருமாற்றம் கண்டு புதுப்பிக்கப்படுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார் தொடர்பு, தகவல் அமைச்சருமான ஜோசஃபின் டியோ.
கதைநூல் அறிமுக விழாவில் தத்ரூபமான சூழலைக் காட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டு நூல் வாசித்து காட்டப்பட்டது.
இதில் சிறுவர்கள், பெற்றோர் என 18 பேர் கலந்துகொண்டனர்.
தத்ரூபமான சூழலைக் காட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சிறுவர்களுக்கு விளக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி
பாராட்டுக்குரியது என்று நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோரில் ஒருவரான 37 வயது சப்ரினா வாஹிட் கூறினார். இந்த நூலை நூலகங்
களிலிருந்து இரவல் வாங்கலாம். இந்நூலின் 2,400 பிரதிகள்
சிங்கப்பூர் எங்கும் உள்ள பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும். 19,500 பிரதிகள் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.