செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
661cf149-e75e-49a1-a16c-119ba9c2cc00
-

புத்தாண்டுக்கு முதல் நாளன்று பேருந்து, ரயில் சேவைகள் நீட்டிப்பு

புத்தாண்டுக்கு முதல் நாளன்று குறிப்பிட்ட சில பேருந்து, ரயில் சேவைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படவுள்ளதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நேற்று தெரிவித்தது. டௌன்டவுன், வடகிழக்கு பாதைகளில் ரயில் சேவை மேலும் ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. டௌன்டவுன் பாதையில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து எக்ஸ்போ நிலையத்தை நோக்கிச் செல்லும் இறுதி ரயில், பின்னிரவு 12.37 மணிக்கும் மறுதிசையில் இறுதி ரயில் பின்னிரவு 12.41 மணிக்கும் கிளம்பும். வடகிழக்கு பாதையில் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து பொங்கோலை நோக்கிச் செல்லும் இறுதி ரயில் பின்னிரவு 1 மணிக்கும் மறுதிசையில் இறுதி ரயில் பின்னிரவு 12.32 மணிக்கும் கிளம்பும்.

இதற்குத் தகுந்தாற்போல் செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதைகளிலும் சேவை நீட்டிக்கப்படும். ரயில் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படுவதைக் கருதி கடைசி பேருந்துச் சேவைகள் இயங்கும் நேரமும் நீட்டிக்கப்படுகிறது. இதன்படி, எஸ்பிஎஸ் இயக்கும் 60A, 63M, 114A, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 261, 269, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812, 974A ஆகிய 24 பேருந்துச் சேவைகளும் கூடுதல் நேரம் இயங்கும்.

மானபங்கம் செய்ததற்கு ஜப்பானிய சித்திரக்கதைகள் காரணம் என்றார்

தன் அக்காவின் சிறுவயது மகளைக் கடந்த ஆண்டு மூன்று முறை மானபங்கம் செய்த 20 வயது இளையர், 'மங்கா' எனப்படும் ஜப்பானிய சித்திரக்கதைகளுக்குத் தான் அடிமை என்பதால் இவ்வாறு குற்றம் புரிந்ததாகக் காரணம் கூறியுள்ளார். பொதுவாக ஜப்பானிய 'மங்கா' மற்றும் அசைவுப்படங்கள் பாலியல் ரீதியாக அமைந்திருக்கும். மலேசியரான அந்த இளையர், குற்றம் புரிந்த சமயத்தில் சிறுமிக்கு ஆறு முதல் ஏழு வயது இருக்கும் என்று கூறப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிங்கப்பூருக்கு வந்த அந்த ஆடவர், அக்காவின் வீட்டில் தங்கினார். ஆடவரின் மடியில் சிறுமி உட்கார்ந்திருந்த சமயத்தில் சிறுமியை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

மடிக்கணினியில் இருவரும் படம் பார்த்துக்கொண்டிருந்த போது இருவரும் 'எதையோ மறைப்பதுபோல்' சிறுமியின் தாயாருக்குத் தோன்றியது. இது குறித்துத் தம்பியிடம் அந்த மாது கேட்டபோது சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டார். இரண்டு நாள்கள் கழித்து காவலர்களிடம் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். ஜப்பானிய சித்திரக்கதைகளுக்குத் தான் அடிமை என்பதால் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது சிறுமியை மானபங்கம் செய்யத் தூண்டப்பட்டதாக ஆடவர் காவலர்களிடம் கூறினார். அந்தரங்கப் பாகங்களைத் தொடுவதால் சிறுமியின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதைத் தான் அறிந்திருந்தும் தொடர்ந்து தனது அடிமைப் பழக்கத்தினால் குற்றம் புரிந்துள்ளார் அந்த ஆடவர் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். அடுத்த ஆண்டு ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.