இவ்வாண்டு ஜனவரி, நவம்பர் மாதங்களுக்கு இடையில் 2,900க்கும் மேற்பட்ட சட்டவிரோத வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விற்பனையாளர்களால் மின்வர்த்தகத் தளங்களில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுஉள்ளன.
இந்த உபகரணங்கள் தனது அமைப்பில் பதிவு செய்யப்படவில்லை அல்லது ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப சரியான பாதுகாப்பு அடையாளத்தை கொண்டிருக்கவில்லை என்று பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பால் மேற்பார்வையிடும் பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம், அதன் சந்தை கண்காணிப்பு முயற்சிகள், பயனீட்டாளர் புகார்கள் மீதான விசாரணைகளின் அடிப்படையில் இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டது என்று மேலும் கூறியது.
'ஏசி அடாப்டர்கள்', எடுத்துச்செல்லக்கூடிய மின்சார இணைப்பான்கள், ரொட்டி வாட்டும் சாதனம், இறைச்சி வாட்டும் சாதனம், 'ஹாட் பிளேட்கள்' போன்ற சமையல் சாதனங்கள், சிகை பராமரிப்பு உபகரணங்கள், நீர் சுடவைக்கும் கேத்தல், சுடுநீர் பெறக்கூடிய குடிநீர் சாதனங்கள் ஆகியவை இணையத்தில் விற்கப்பட்ட முதல் ஐந்து வகையான பதிவு செய்யப்படாத சாதனங்கள்.
அமேசன், கெரோசல், இஸிபை, லஸாடா, க்யூ10, ஷாப்பி போன்ற முக்கிய மின்வர்த்தகத் தளங்களில் அவை காணப்பட்டன.
பதிவுசெய்யப்படாத வீட்டு உபயோகப் பொருட்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம் மின்வர்த்தகத் தளங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இந்த இந்த சட்டவிரோத தயாரிப்புகளின் விற்பனையாளர்களுக்கு அபராதம் அல்லது எச்சரிக்கைக் கடிதங்களையும் பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம் வழங்கியுள்ளது.
பதிவு செய்யப்படாத கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோருக்கு $10,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

