தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் பல்வேறு மோசடிகள் தொடர்பாக 303 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1,020க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்
படுகிறது. இந்த மோசடிச் சம்பவங்களில் $8.4 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை பொதுமக்கள் இழந்துள்ளதாக காவல்துறை நேற்று தெரிவித்தது.
இணைய காதல், இணைய வர்த்தகம், ஆள்மாறாட்டம், முதலீடு மோசடி, வேலை மோசடி மற்றும் கடன் மோசடி ஆகியன தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
காவல்துறையிடம் சிக்கியோர் 15 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்களில் 92 பெண்களும் அடங்குவர்.
வர்த்தக விவகாரத் துறை, ஏழு காவல்துறைப் பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 17 வரை அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சந்தேக நபர்கள் ஈடுபட்ட மோசடிக் குற்றங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்திற்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, $5,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
உரிமம் இன்றி எந்தவிதமான பணம் வழங்கல் சேவை அளிக்கும் வர்த்தகத்தை நடத்துவது சிங்கப்பூரில் குற்றம். இந்தக் குற்றத்திற்கு $125,000க்கு மேற்படாத அபராதம் மூன்றாண்டுகளுக்கு மேற்படாத சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.
மோசடிச் சம்பவங்களில் ஈடு
படுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

