வேண்டுமென்றே சமய உணர்வைப் புண்படுத்தும் விதமாக 'இன்ஸ்டகிராம் ஸ்டோரீஸ்' வெளியிட்ட குற்றச்சாட்டு இன்று ஆடவர் ஒருவர் மீது சுமத்தப்பட உள்ளது.
இன்ஸ்டகிராமில் முறையற்ற பதிவு வெளியிட்டதாக ஆடவர் ஒருவர் மீது கடந்த ஆண்டு ஜூன் 7, 8 தேதிகளில் பல்வேறு புகார்கள் வந்ததாக காவல்துறை நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்திலான அச்சுறுத்தல் அந்தப் பதிவுகளில் இடம்பெற்று இருந்ததாகவும் புகார்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் தேதி 19 வயது ஆடவரை ஜூரோங் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.
கணினி, மடிக்கணினி, கைபேசி ஆகியன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
தெமாசெக் பல்துறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் என அந்த ஆடவரை டுவிட்டர் பயனாளர்கள் அடையாளம் கண்டதாக கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டிருந்தது.
புண்படுத்தும் விதமான கருத்துகளை வெளியிட்ட தமது மாணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போ வதாக அந்தப் பலதுறைத் தொழில்நுட்பக்கல்லூரி தனது டுவிட்டரில் தெரிவித்தது.
தற்போது 21 வயதாகும் அந்த ஆடவர் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன. தகாத தொடர்பு மற்றும் ஆபாசப் படங்களை வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் அவை.
சமய உணர்வைப் புண்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே மோசமான கருத்துகளை வெளியிடும் குற்றத்திற்கு மூன்றாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையிலான செயல்கள் கடுமையானவையாகக் கருதப்படும் என்றும் சட்டப்படியான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

