புதிய வகை ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் நிலவும் வேளையிலும் விழாக்கால வாரயிறுதியில் ஆர்ச்சர் சாலை கடைகள் களைகட்டி இருந்தன.
பல கடைத்தொகுதிகள் மற்றும் உணவகங்கள் முன்பு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. வாடிக்கையாளர் அதிக அளவில் கடை
வீதிகளுக்கு வந்ததன் காரணமாக கொள்ளைநோயால் தடுமாற்றம் கண்ட சில்லறை சேவைத் துறைக்கு மீள்வோம் என்ற நிம்மதி பிறந்துள்ளது.
குறிப்பாக, இயோன் ஆர்ச்சர்ட், நீ ஆன் சிட்டி போன்ற கடைத்தொகுதிகளில் நேற்றும் நேற்று முன்தினமும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கிறிஸ்மஸ் பரிசுப்பொருள்களை வாங்குவதோடு ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடலாம் என்று விதிவிலக்கை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் பலர்.
அவர்களில் சிலரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ெசய்தியாளர் சந்தித்துப் பேசினார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கடைத்தொகுதிகள், உணவகங்கள் போன்றவற்றில் அனுமதி உண்டு என்பதால் புதிய வகைத் தொற்று பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை என்று சிலர் கூறினர்.
கொள்ளைநோய்க்கு முந்திய வழக்கநிலை ஏற்படவேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர்.
விழாக்கால வழக்கத்தின் ஒரு பகுதியாக கடைகளுக்குச் செல்வதாக சிலரும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதாக வேறுசிலரும் கூறினர்.
டெனிஸ் யுவென், 28, என்னும் பெண்மணி தமது மூன்றாம் ஆண்டு திருமண நாளை நீ ஆன் சிட்டியில் கொண்டாடினார். "நான் பாதுகாப்பாக உணர்கிறேன். தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதும் அதன்படி கடைகளுக்கு வருவோர் தடுப்பூசி போட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை," என்றார் அவர்.
கெரோலின் லோக், 43, என்னும் இல்லத்தரசி, பொதுமக்கள் பீதியடையத் தேவை இல்லை என்றார். புதிய வகை கொரோனா கிருமியைக் காரணம் காட்டி அரசாங்கம் ஒன்றுகூடல்களைத் தடுக்கவில்லை என்று அதற்கு அவர் விளக்கம் அளித்தார்.
அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நம்மை அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை ஆர்ச்சர்ட் வட்டாரக் கடைகளுக்குச் சென்ற இருவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

