கி.ஜனார்த்தனன்
நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட முப்பரிமாண கனசதுரம், நிலவுக்கு அடுத்த ஆண்டு அனுப்பப்படும் கலைப்படைப்புகளில் இடம்பெறும் சிங்கப்பூர் படைப்பாகும்.
நெதர்லாந்தில் தளம் கொண்டுள்ள நிலவு கலைக்கூட அறநிறுவனம் தேர்ந்தெடுத்துள்ள நூறு கலைப்படைப்புகளில் ஒன்றான இந்த கன சதுரத்தை உள்ளூர் கலைஞர் லட்சுமி மோகன்பாபு, 53, வடிவமைத்திருக்கிறார்.
'ஸ்டிரக்ச்சர் அன்ட் ரிப்ளெக்டன்ஸ்' ( Structure & Reflectance) என்ற அந்தக் கனசதுரம், பகடைக் காயைவிட சிறியது. கனசதுரத்தின் ஒவ்வொரு பக்கம் 0.98 சென்டி மீட்டர்.
கனசதுரத்தின் பக்கங்களில் நான்கு பக்கங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தன்மையான வடிவங்கள் உள்ளன. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் மெட்டியோ செய்ட்டாவுடன் இணைந்து அவர் இதை உருவாக்கி உள்ளார்.
வெவ்வேறு படிகங்களாலும் துருப்பிடிக்காத எஃக்காலும் செய்யப்பட்டுள்ள கனசதுரத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து காணும்போது வேறு நிறங்களில் தோற்றம் அளிக்கும்.
10 சென்டிமீட்டர் அகல, 10 சென்டிமீட்டர் நீள 1 சென்டிமீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ள ஒரு பேழைக்குள் திருவாட்டி லட்சுமியின் கலைப்படைப்பு சேர்க்கப்படும்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தப் பேழையைச் சுமந்துகொண்டு என்ஜி-17 என்ற விண்கலம், பூமியிலிருந்து விண்வெளிக்குப் புறப்படும்.
இந்தத் திட்டத்திற்காக இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சிங்கப்பூரரின் கலைப்படைப்பு திருமதி லட்சுமியுடையது ஆகும்.
இப்போது சிங்கப்பூரராக இருக்கும் திருமதி லட்சுமி, கேரளாவில் பிறந்து சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பில் அப்போது இருந்த ஆப்கானிஸ்தானில் வளர்ந்தவர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் இவரது தந்தை கிராமப்புறத் திட்ட அதிகாரியாக செயல்பட்டார். இல்லத்தரசியான தாயாரால் இரண்டு சகோதரர்களுடன் வளர்க்கப்பட்ட லட்சுமி பாதுகாப்பாக வளர்ந்தபோதும் சுற்றிலும் வன்முறையும் பூசலும் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன.
அடிக்கடி பல இடங்களில் வெடிகுண்டு மழை பொழியும். அத்தகைய ஒரு சூழல் காரணமாக வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியது என்ற ஒரு தெளிவு தம்மிடம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறினார் திருமதி லட்சுமி.
ஆப்கானிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களுடன் வளர்ந்ததால் நல்லிணக்கத்தின் மதிப்பை உணரமுடிந்ததாக இவர் மேலும் தெரிவித்தார்.
உலகிலுள்ள மனிதர்கள் வேறுபட்டவர்களாக இருந்தாலும் அனை வரும் ஒரே உலகில் இணைக்கப்பட்டிருப்பதை தமது வடிவம் காட்டு வதாக லட்சுமி கூறினார்.
"பல இடுக்குகளைக் கொண்டிருந்தாலும் உண்மையிலேயே இது ஒரு வகையான வட்டம்," என்றார் அவர். இந்திய கலாசாரங்களில் இடம்பெறும் மண்டல ஓவியங்களைப் போல தமது வடிவம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"இந்திய பாரம்பரிய கலையில் மண்டலங்கள் பிரபஞ்சங்களைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகின்றன. எனது வடிவமும் உலகத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதுகிறேன்," என்றார்.
"கோயில்களில் மட்டுமின்றி தேவாலயங்களிலும் பள்ளிவாசல்களிலும் வடிவியல் வடிவமைப்புகள் (geometric design) இருக்கின்றன. பல்வேறு கலாசாரங்களின் கலவை இது," என்றார் திருமதி லட்சுமி.
1986 முதல் 1991 வரை டெல்லியில் மணிபால் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் கட்டடக் கலை யில் பட்டக்கல்வியை முடித்த திருமதி லட்சுமியின் கலைப்படைப்புகளில் கட்டடக் கலைக்குரிய கோடுகளைச் சார்ந்த, அளவுகளைச் சரியான முறையில் கணித்து வரையப்படும் பாணி தென்படுகிறது.
அங்குதான் அவர், நிலவு கலைப்பொருளுக்காகப் பயன்படுத்திய வடிவமைப்பு முதலில் உதயமானதாகத் தெரிவித்தார்.
அத்துடன் தமது வடிவங்களை ஓவியங்களாகவும் சிற்பங்களாவும் மட்டும் வெளிப்படுத்தாமல் கம்பளிகள், மேசைகள், நாற்காலிகள், ஆபரணங்கள் எனப் பல பொருட்களாகவும் உருவாக்க முனைந்துள்ளார்.
தொலைதொடர்புத் துறையில் பணியாற்றும் தமது கணவருடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூருக்கு வந்திருந்த லட்சுமி, தாம் ஆக அதிக ஆண்டுகள் வாழ்ந்த ஒரே நாடு சிங்கப்பூர் எனத் தெரிவித்தார்.
"இதனால் நான் என்னைச் சிங்கப்பூர் ஓவியர் என அடையாளப்படுத்துகிறேன். பல்வேறு கலாசாரங்கள் ஒன்றிணையும் புள்ளியான சிங்கப்பூர், ஒற்றுமையைக் கருப்பொருளாகக் கொண்ட எனது படைப்புகளை உருவாக்குவதற்கு சிறந்த, பாதுகாப்பான இடம்," என்று அவர் கூறினார்.
ஓவியக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்கள் இருந்தாலும் கலைஞர்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டிய நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
சில நேரங்களில் ஓவியக்கலை சிலரால் நல்ல பணியாக மதிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
"நாம் பார்க்கும் ஒவ்வொரு பொரு ளும் ஓர் ஓவியம், ஒரு வடிவமைப்பு என்பதை மக்கள் உணரும்போது கலைஞர்கள் மீதான மதிப்பு உயரும்," என்று அவர் கூறினார்.
நிலவு வரை செல்ல இருக்கும் தமது வடிவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் நகர்ப்புறங்களிலும் சிற்பங்களாகவும் கட்டட ஓவியங்களாகவும் பூக்கவேண்டும் என்பதே இவரது கனவு.