புத்தாண்டை முன்னிட்டு இம்முறை மரினா பேயில் நடைபெறும் கொண்டாட்டத்தில் வாணவேடிக்கை இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் வாண
வேடிக்கையைக் கண்டு மகிழ
புத்தாண்டு முதல் நாள் இரவு மரினா பேயில் மக்கள் கூட்டம் கூடும். இம்முறை கூட்டம் கூடு
வதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமி பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மரினா பேயில் வாணவேடிக்கை வெடிக்கப்படாதபோதிலும் பல்வேறு குடியிருப்பு வட்டாரங்களில் இடம்பெறும் வாணவேடிக்கையை வீட்டிலிருந்தவாறு பொதுமக்கள் பார்த்து மகிழலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது. 2005ஆம் ஆண்டில் இந்த வருடாந்திரக் கொண்டாட்டம் தொடங்கியதிலிருந்து கடந்த புத்தாண்டுக்கும் வரும் புத்தாண்டுக்கும் வாணவேடிக்கை இல்லாமல் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
"புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தொலைக்காட்சியிலும் இணையம் மூலமாகவும் பொதுமக்கள் கண்டு களிக்கலாம். குறிப்பிட்ட சில வட்டாரங்களில் இடம்பெறும் வாணவேடிக்கை, மரினா பேயில் நடைபெறும் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றை பார்க்கலாம்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிக் காட்சி இம்முறையும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒளிக் காட்சி இம்மாதம் 1ஆம் தேதியன்று தொடங்கியது. இம்மாதம் 31ஆம் தேதி இரவு வரை அது ஒவ்வோர் இரவும்
அவ்வட்டாரத்தை ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்கும்.
ஒரே நேரத்தில் கூட்டம் அலைமோதுவதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
கொண்டாட்டம் நடத்தப்பட்டாலும் பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

