கவனக்குறைவுடன் நடந்துகொண்டு ஒருவருக்கு மரணம் விளைவித்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட சிங்கப்பூர் ஆயுதப் படை கேப்டன் ஓங் லின் ஜியேவுக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பயோனிக்ஸ் வாகனம் ஒன்று பின்னோக்கிச் செலுத்தப்பட்டபோது பின்னால் இருந்த லேண்ட் ரோவர் வாகனம் மீது ஏறியது. இதன் விளைவாக லேண்ட் ரோவர் ஓட்டுநர் மாண்டார்.
இந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று நிகழ்ந்தது. சம்பவத்துக்குப் பிறகு ஓங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அந்த பயோனிக்ஸ் வாகனம் ஏன் நின்றது என்று தமக்குத் தெரியாது எனத் தெரிவித்த ஓங், அதன் இடது புறமாக அதைக் கடந்து செல்லும்படி முழுநேர தேசிய சேவையாளர் கார்ப்
பரல் ஃபெர்ஸ்ட் கிளாஸ் லியூ காயுக்குத் தாம் உத்தரவிட்டதாக கூறினார்.
அந்த பயோனிக்ஸ் வாகனம் பின்னோக்கிச் செல்லும் என்று தமக்குத் தெரியாது என்று ஓங் தெரிவித்திருந்தார்.
பாதுகாப்பு விதிமுறையை ஓங் கடைப்பிடிக்கத் தவறிய காரணத்தால் லியூ மாண்டதாகக் கடந்த மாதம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
தம்மைப் பிரதிநிதிக்க 30 வயது ஓங் புதிய வழக்கறிஞரை நியமித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ஓங்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டதால் அடுத்த மாதம் 21ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
"தங்களுக்குக்கீழ் இருக்கும் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உயர் அதிகாரிகளே பொறுப்பு. பயிற்சிகளின்போது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
"கவனக்குறைவுடன் செயல்படும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஒழுங்கு நடவடிக்கைக் கட்டமைப்பின்கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். கவனக்குறைவுடன் நடந்து கொண்டு மரணம் விளைவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

