தங்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஒரு கவலை பெற்றோரிடம் நிலவுகிறது.
சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கு ஒன்றின் மூலம் மருத்துவர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
தடுப்பூசி காரணமாக மற்றவர்களைப் போலவே சிறார்களுக்கும் அதேபோன்ற வேண்டாத விளைவுகளே ஏற்படலாம்.
ஊசி போட்ட இடத்தில் வலி, லேசான தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, மற்ற வர்களைப் போலவே இரண்டு வார காலத்திற்குக் கடுமையான உடற்பயிற்சிகளில் சிறார்கள் ஈடுபடக்கூடாது.
ஃபைசர் தடுப்பூசியைப் பொறுத்தவரை, அதனால் சிறுமிகளிடம் பூப்படைதல் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
எதிர்காலத்தில் கருவுறுதலும் அதனால் பாதிக்கப்படாது என்றும் மருத்துவர்கள் பெற்றோருக்கு உறுதிபட விளக்கம் அளித்து உள்ளனர்.
கடுமையான ஒவ்வாமை நோய் உள்ள சிறுவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக்கூடாது.
முதல் ஊசியைப் போட்டுக்கொண்டதும் ஒவ்வாமை ஏற்பட்டால் அடுத்த ஊசியைத் தவிர்த்துவிட வேண்டும். இருந்தாலும் ஆஸ்துமா போன்ற பொதுவான பாதிப்பு இருக்கும் சிறார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
10 மைக்ரோகிராம் தடுப்பூசி மருந்து, இளையர்களுக்குப் போடப்படும் மருந்து அளவுக்கு ஆற்றலுடன் இருக்கும் என்பது பரிசோதனை மூலம் தெரியவந்து இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்குப் பெரியவர்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று பெற்றோர்கள் காத்திருக்கக்கூடாது.
பிள்ளையின் எடையை அல்லது உருவத்தை அல்லாமல் வயதைக் கருத்தில்கொண்டு மருந்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொவிட்-19 கிருமி தொற்றிய சிறார்களிடம் இதுவரை லேசான அறிகுறிகளே தெரியவந்துள்ளன. அல்லது அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை.
இப்படி இருக்கையில் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கம் அளித்த மருத்துவர்கள், சமூகத்தில் தொற்று கூடும்போது அதிக சிறார்கள் பாதிக்கப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டினர்.

