புக்கிட் தீமாவில் இருக்கும் 'தி எனிடைம் ஃபிட்னஸ்' என்ற உடலுறுதி நிலையம் சுத்தப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறது.
என்றாலும் கிருமித்தொற்று அச்சம் காரணமாக சிலர் இப்போது அங்கு செல்லத் தயங்குகிறார்கள்.
அந்த நிலையத்தில்தான் சிங்கப்பூரின் முதலாவது ஓமிக்ரான் தொற்றுக் குழுமம் தலைகாட்டி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நிலையத்துடன் தொடர்புடைய இரண்டு கொவிட்-19 நோயாளிகளுக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக முதற்கட்ட பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
மூன்றாவது நபரின் பரிசோதனை முடிவுகள் இனிமேல்தான் வரவேண்டும்.
சிங்கப்பூரில் 71 பேருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
அவர்களில் 65 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஆறு பேர் உள்ளூர் மக்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வேளையில், புக்கிட் தீமா ஷாப்பிங் சென்டர் கட்டடத்தில் செயல்படும் இந்த உடலுறுதி நிலையம் மேலும் ஒரு முறை சுத்தப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொற்று இருப்பதாக தெரியவந்த மூன்று பேரும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் மூவருக்கும் லேசான அறிகுறிகளே இருந்தன.
அந்த மூவரும் சென்ற புதன்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையில் அந்த நிலையத்திற்குச் சென்று வந்திருந்தார்கள்.
அவர்களில் இருவர், 21 முதல் 24 வரை வயதுள்ள ஆடவர்கள். 18 வயது நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர் ஒருவரும் அவர்களில் அடங்குவார்.
அந்த மூவரும் சொந்தமாக அந்த நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டவர்கள் என்றும் அவர்கள் வகுப்பு எதிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் அந்த நிலையப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
உடலுறுதி நிலையத்திற்குச் செல்வோர் முகக்கவசம் இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபட முடியும்.
இவ்வேளையில், நேற்று முற்பகல் சுமார் 10 மணிக்கு அந்த நிலையத்தில் இருவர் மட்டுமே இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
ஊழியர்கள் உடற்பயிற்சி சாத னங்களைக் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார் கள் என்றும் அது கூறியது.