இம்மாதம் 31ஆம் தேதியிலிருந்து சுமார் 24,400 நிறுவனங்களுக்கு மொத்தமாக 400 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான சம்பள உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை, 380,000க்கும் அதிகமான சிங்கப்பூர் குடிமக்களாக இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கைகொடுக்கும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் வேலை ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் இந்த உதவித்தொகையையும் சேர்த்து இதுவரை மொத்தம் 28 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமக்களாக உள்ள ஊழியர்களுக்கு மத்திய சேமநிதிக் கணக்கில் மாதந்தோறும் அவர்களின் நிறுவனங்கள் கட்டாயமாக ஒரு தொகையைச் நிரப்பவேண்டும்.
இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை கொடுக்கப்பட்ட தேதிக்குள் ஊழியர் மத்திய சேமநிதிக் கணக்கில் பணம் நிரப்பிய நிறுவனங்கள் இந்த உதவித் தொகைக்குத் தகுதிபெறும். இம்மாத இறுதியில் வழங்கப்படும் உதவித்தொகை அந்த காலகட்டத்திற்கான சம்பளங்களுக்கானது. சென்ற மாதம் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்பட்ட சம்பளங்களுக்கான உதவித்ெதாகை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்படும்.
தகுதிபெறும் நிறுவனங்களுக்கு இம்மாத இறுதியில் அது குறித்து தெரியப்படுத்தப்படும். உதவித்தொகைக்குத் தகுதிப்ெபறுவதைத் தெரிவிக்கும் கடிதத்தை myTaxPortal இணையத்தளத்தில் பார்க்கலாம்.
இம்மாதம் 27ஆம் தேதிக்குள் நிறுவனங்களுக்கான 'பேனவ்' வசதிக்கு விண்ணப்பம் செய்யும் நிறுவனங்களுக்கும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துடன் ஜைரோ வசதியைச் செய்துகொண்டுள்ள நிறுவனங்களுக்கும் இம்மாதம் 31ஆம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வசதிகளைச் செய்துகொள்ளாத இதர நிறுவனங்கள், அடுத்த மாதம் 14ஆம் தேதியிலிருந்து காசோலைகளைப் பெறும். ஊழியர்களின் சம்பளத்திற்கேற்ப சரியான தொகையை அவர்களின் மத்திய சேமநிதிச் சந்தா கணக்கில் சேர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் தங்களின் அறிக்கையில் வலியுறுத்தின.
நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வழங்கும் மத்திய சேமநிதிச் சந்தா தொகையைக் கருத்தில்கொண்டே வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகை நிர்ணயிக்கப்படும்.
வேலை ஆதரவுத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது. மேலும், குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின்கீழ் அவற்றின் முதலாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

