மலேசியாவைக் கடும் மழையும் வெள்ளமும் சீரழித்து வரும் நிலையில், சிங்கப்பூரின் மீன், காய்கறி விநியோகம் பாதிப்பின்றி நடைபெறுவதாக பிரதான விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மீன் விலையில் 20 முதல் 30 காசு ஏற்றம் இருப்பதை பிரதான மீன் விநியோக நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. இருப்பினும், அவை கூறிய காரணங்கள் வேறுபட்டன.
மலேசிய வெள்ள நிலவரத்தால் அங்குள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்றது ஒரு தரப்பு. ஆண்டிறுதி மழைக்காலத்தைக் காரணம் காட்டியது மற்றொரு தரப்பு. வெள்ளத்தால் மீன் விநியோகம் 20% முதல் 30% குறைந்துள்ளது என்றும் அதனால் விற்பனை விலை அதிகரித்துள்ளது என்றும் சிங்கப்பூர் மீன் வியாபாரிகளின் பொதுச் சங்கத் தலைவர் திரு அங் ஜுவீ ஹெர்ங் கூறினார்.
நீ சூன் ஈஸ்ட் என்2 சந்தையில் காய்கறிக் கடை வைத்திருக்கும் திரு ஜெயா, 32, தம்முடைய விநியோகத் தரப்பு விலைகளை 20 முதல் 30 காசு உயர்த்தியதாகக் கூறினார். அதனால் தாம் தமது காய்கறிகளை 10 காசு உயர்த்தியதாகவும் கூறினார்.
மலேசிய வெள்ளம் இந்நிலைக்குக் காரணம் இல்லை என்றார் அவர். விடுமுறைக் காலம் என்பதால் பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள், குடும்பங்கள் சமைப்பதில்லை, வெளியே சென்று சாப்பிடுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, கடைக்காரர்களில் பலர் முன் ஏற்பாட்டுடன் இருப்பதைக் காண முடிகிறது.

