தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) மூலம் சிங்கப்பூருக்கு வருவதற்கான புதிய விமானப் பயணச்சீட்டு விற்பனை நேற்று (டிசம்பர் 23) முதல் ஜனவரி 20 வரை நிறுத்திவைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) சேவை நிலையம் முன்பு ஏராளமானோர் குவியத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அங்கு நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
ஐயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதி யில் அமைந்துள்ள அந்த சேவை நிலையத்தின் முன்னால் மணிக்கணக்கில் காத்திருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் பேசியவர்கள் கூறினர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நேரடித் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்வது சிரமமாக இருந்ததால் அதன் சேவை நிலையத்துக்கு நேரடியாக வந்ததாகச் சிலர் தெரிவித்தனர்.
இரவு 11.59 மணி காலக்கெடுவுக்குள் விடிஎல் பயணச்சீட்டுகளை வாங்கவும் வாங்கிய பயணச்சீட்டுகளில் மாற்றம் செய்யவும் அங்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர் கூறினர்.
அமெரிக்கா சென்று அங்கிருந்து அடுத்த ஆண்டு சிங்கப்பூருக்குத் திரும்பி வர பயணச்சீட்டு தொடர்பான சில எளிய சந்தேகங்களுக்கு விடைகாண சுமார் ஆறு மணி நேரம் சேவை நிலையம் முன் காத்திருந்ததாக எல்விஸ் சுவா, 23, என்னும் மாணவர் தெரிவித்தார்.
கால்கடுக்கக் காத்திருந்தபோதிலும் சேவை ஊழியர் தன்மையாக நடந்துகொண்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மற்றொருவரான திரு ரஹ்மான் பிற்பகல் 1 மணி முதல் நான்கு மணி நேரம் எஸ்ஐஏ சேவை நிலையம் முன்னால் காத்திருந்ததாகச் சொன்னார்.