'விடிஎல்' பயணச்சீட்டு விற்பனை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான ஜனவரி இறுதிவார பேருந்துப்
பயணச்சீட்டுகள் அனைத்தும் வேக மாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக பேருந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனப் புத்தாண்டையொட்டி சொந்த ஊருக்குத் திரும்ப மலேசியர்கள் முந்திக்கொண்டு பயணச்சீட்டு வாங்க முயன்றதாக அது கூறியது.
ஓமிக்ரான் தொற்றைக் கட்டுப்
படுத்தும் நோக்கில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 20 வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு விடிஎல் எனப்படும் தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைத் திட்ட பயணச்சீட்டு விற்பனை நிறுத்திவைக்கப்படும் என்று நேற்று முன்தினம் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்தது.
பிப்ரவரி 1ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குவதற்கு 10 நாள் முன்பு வரை பயணச்சீட்டு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தடைக்குப் பிறகு அதாவது ஜனவரி 21லிருந்து மலேசியா செல்லப் பலரும் படையெடுத்தனர்.
அரசாங்க அறிவிப்பு வெளியான பின்னர் சிங்கப்பூர்-ஜோகூர் பாரு பேருந்துப் பயணச்சீட்டு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியதாகவும் ஜனவரி 21க்கும் ஜனவரி 31க்கும் இடைப்பட்ட நாள்களுக்கான பயணச்சீட்டுகள் அனைத்தும் ஒரு மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்ததாகவும் 'காஸ்வே லிங்க்' பேருந்து நிறு வனம் தெரிவித்தது.
இருப்பினும், இதே நாள்களில் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கான பயணச்சீட்டுகள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதாக இந்நிறுவனத்தின் பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார்.
பயணச்சீட்டு விற்பனை நிறுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு முன்னரே ஜோகூர் பாருவுக்கான விற்பனை நடந்துகொண்டு இருந்ததாகவும் அறிவிப்பு வெளியான பின்னர் பயணச்சீட்டு முன்பதிவுகளும் பயண விசாரணைகளும் ஏராளமாக அதிகரித்ததாக அவர் சொன்னார்.
இதற்கிடையே, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தினமும் ஒவ்வொரு பயணத் தேதி என்ற அடிப்படையில் கட்டம் கட்டமாக பயணச்சீட்டை விற்றுவருவதாக மற்றொரு பேருந்து நிறுவனமான 'டிரான்ஸ்டார் டிராவல்' தெரிவித்தது. அதன்படி, ஜனவரி 21ஆம் தேதி க்கான பயணச்சீட்டு விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
அன்றைய தேதிக்கான சிங்கப்பூர்-ஜோகூர் பாரு பயணச்சீட்டு விற்பனை காலை 8 மணிக்குத் தொடங்கியதாகவும் ஒரு மணி
நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
விடிஎல் பயணச்சீட்டு விற்பனை ஜனவரி 20 வரை நிறுத்திவைக்கப்படும் அதேநேரத்தில் ஜனவரி 21க்குப் பிறகு பேருந்துப் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும் என்றும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கிணங்க, தற்போது 100ஆக இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை 48 ஆகக் குறையும்.
அதாவது ஒவ்வொரு மார்க்கத்திலும் தலா 24 பேருந்துகள் இயக்கப்படும் என்று வர்த்தக தொழில் அமைச்சு புதன்கிழமை தெரிவித்திருந்தது.

