அண்மையில் ஓமிக்ரான் குழுமம் என்ற சந்தேகத்திற்குட்பட்ட 'எனிடைம் ஃபிட்னஸ்' உடலுறுதி நிலையத்தை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
புக்கிட் தீமா கடைத்தொகுதியில் அமைந்துள்ள அந்த நிலையம், தனது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்களா எனக் கவனிக்கத் தவறியதற்காக 'ஸ்போர்ட் சிங்கப்பூர்' (ஸ்போர்ட்எஸ்ஜி) அமைப்பு மூடல் உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை (நேற்று முன்தினம்) முதல் பத்து நாள்களுக்கு அந்த நிலையம் மூடப்பட்டு இருக்கும்.
சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை சிங்கப்பூரில் உள்ள அனைத்து விளையாட்டு நிலையங்களும் உடலுறுதி நிலையங்களும் இவற்றுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களும் கடைப்பிடிப்பதும் விழிப் புடன் நடந்துகொள்வதும் அவசியம் என்று 'ஸ்போர்ட்எஸ்ஜி' நேற்று தனது அறிக்கையில் கூறியது.
மேலும், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
விளையாட்டு, உடலுறுதி நிலையங்கள் தங்களது நடவடிக்கைகளை பொறுப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடருவதற்காக அந்தத் துறையினருடன் தான் அணுக்கமாகப் பணியாற்றப்போவதாகவும் 'ஸ்போர்ட்எஸ்ஜி' குறிப்பிட்டது.
'எனிடைம் ஃபிட்னஸ்' உடலுறுதி நிலையத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக முதற்கட்டப் பரிசோதனையில் தெரிய வந்தது என கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்து இருந்தது.
மூன்றாவது நபரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

