சிங்கப்பூரில் புதன்கிழமை 335 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கொரோனா கிருமித்தொற்றுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இங்கு மாண்டோர் எண்ணிக்கை 818ஐ தொட்டது. குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் 95 பேர் உயிரிழந்து விட்டனர்.
புதிய தொற்றுச் சம்பவங்கள் செவ்வாய்க்கிழமையைவிட அதிகம் பதிவாயின. 280 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்டது.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 335 பேரில் 259 பேர் உள்ளூரில் தொற்றுக்கு ஆளானவர்கள். அவர்களில் 245 பேர் சமூக அளவிலும் 14 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்திலும் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தொற்று தொடர்பான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மேலும், புதன்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் 76 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோய் பரவத் தொடங்கியது முதல் இதுவே ஆக அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் தொற்று எண்ணிக்கை.
இதற்கு முன்னர் இம்மாதம் 19ஆம் தேதி பதிவான 67 வெளிநாட்டுப் பயணிகள் தொற்றுச் சம்பவங்களே ஆக அதிகமானதாக இருந்துவந்தது.
அன்றாடத் தொற்று எண்ணிக்கை புதன்கிழமை வரை தொடர்ந்து 20 நாள்களாக 1,000க்கும் குறைவாக பதிவாகி வந்துள்ளது.

