எதிர்காலத்திற்கான மேம்பட்ட, மேலும் துரிதமாகச் செயல்படக்
கூடிய கருவிகளின் தேவை அதிகரிக்கும் என்ற நிலையில் சிங்கப்பூர் புதிதாக $210 மில்லியன் அமெரிக்க டாலர் (S$286 மி.) மதிப்பிலான கூட்டு ஆராய்ச்சி முதலீட்டைச் செய்யவுள்ளது. இதற்காக பகுதி மின்கடத்தி சாதனங்களைத் தயாரிக்கும் ஜாம்பவானான 'அப்ளைட் மெட்டீரியல்ஸ்' அமெரிக்க நிறுவனத்துடன் சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் (ஏஸ்டார்) நுண்மின்னணுவியல் கழகம் (ஐஎம்இ) இணையவுள்ளது.
இருதரப்புகளும் தங்களின் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மூன்றாவது கட்டமாக நீட்டித்துள்ளன. இதன்படி 2026ஆம் ஆண்டுவரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி தொடரும்.
கூட்டு முயற்சியாகத் தொடங்கிய இருதரப்புகளின் ஆய்வுக்கூடம், 2011ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அப்போது மேம்பட்ட முப்பரிமாண சில்லுகளைத் தயாரிக்கும் திறனை வளர்ப்பதற்கு
ஆய்வுக்கூடம் பயன்பட்டது.
புதிதாகச் செய்யப்படும் முதலீடு, ஆய்வு நிலையத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படும். இதனால் கலப்பின பிணைப்பு, வளர்ந்து வரும் இதர முப்பரிமாண சில்லு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்கள், சாதனங்கள், செயல்முறைத் தொழில்நுட்பத் தீர்வுகளைத் துரிதப்படுத்துவதே இலக்கு.
பகுதி மின்கடத்தி, அமைப்பு
முறைகள் நிறுவனங்களுக்கு இந்த விரிவாக்கத் திட்டம் மூலம் முழுமையான கருவிகள் தொகுப்பும் தொழில்நுட்பத் தொகுப்பும் கிடைக்கும்.
பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்வதில் கலப்பின பிணைப்புத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எரிசக்தி ஆற்றலையும் அமைப்புமுறை செயல்திறனையும் மேம்படுத்த இது உதவுகிறது.
இதுவரை ஆய்வு நிலையத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ள 'அப்ளைட் மெட்டீரியல்ஸ்', 'ஏஸ்டார்' அமைப்பின் 'ஐஎம்இ' ஆகியவை கூட்டாக மொத்தம் $450 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டத்தின்கீழ் ஆய்வுக்கூடத்திற்கு மேலும் சுமார் 3,500 சதுர அடி இடம் உருவாக்கப்படும். அத்துடன் புதிதாக 30 ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுவர். தற்போது ஆராய்ச்சி, மேம்பாடு அம்சங்கள் தொடர்பில் நிலையத்தில் கிட்டத்தட்ட 150 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இருதரப்புகளுக்கும் இடையிலான மூன்றாவது கட்ட ஒத்துழைப்பு நேற்று தொடங்கியது. அந்த விழாவில், வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
இந்த ஆராய்ச்சி ஒத்துழைப்பால் சிங்கப்பூரின் மேலும் பரந்து விரிந்த பகுதி மின்கடத்தி உற்பத்திக் கட்டமைப்பில் கூடுதல் பங்காளிகள் பலனடைவர் என்று ஏஸ்டார் அமைப்பின் அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி மன்றத்தின் உதவி தலைமை நிர்வாகி பேராசிரியர் அல்ஃபிரட் ஹுவான் கூறினார்.
"குறைந்த விலையில், மேம்பட்ட மேலும் விரைவாகச் செயல்படும் கருவிகள் நமக்குத் தொடர்ந்து தேவைப்படும் நிலையில், எதிர்காலத்தில் கைகொடுக்கும் பல்வேறு கருவிகளை உருவாக்குவதற்கு இந்த மூன்றாம் கட்ட ஆராய்ச்சிதான் அடித்தளமாக இருக்கும்," என்றார் ஏஸ்டார் ஐஎம்இ பிரிவின் நிர்வாக இயக்குநர் டெரன்ஸ் கான்.
சிங்கப்பூரின் கடந்த 30 ஆண்டு களாக 'அப்ளைட் மெட்டீரியல்ஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது. ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பில் இங்கு மூன்று ஆய்வுக்கூடங்களை அது அமைத்துள்ளது.