நாடாளுமன்றத்தில் பொய் கூறியதற்குப் பொறுப்பேற்கவும் அதைத் தெளிவுப்படுத்தும் வகையில் விளக்கமளிக்கவும் பாட்டாளிக்
கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தம்மிடம் சொல்லவில்லை என்று நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் செங்காங் குழுத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
மாறாக, கூறிய பொய்யை இறுதி வரை தற்காத்துப் பேசும்படி திரு சிங் கூறியதாக ரயீசா கான் தெரிவித்தார்.
நாடாளுமன்ற விசாரணைக் குழுவுக்கு முன்பு மூன்றாவது முறையாக முன்னிலைப்படுத்தப்பட்ட ரயீசா கான், கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி திரு சிங்குடன் நடந்த சந்திப்பின்போது நிகழ்ந்தவற்றைப் பற்றி கேட்கப்பட்ட
கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இம்மாதம் 2ஆம், 3ஆம் தேதிகளில் சொன்னதையே நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் அவர் தெரிவித்தார்.
பொய் கூறியதற்குப் பொறுப்பேற்று அதைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ரயீசா கானிடம் தாம் தெரிவித்திருந்ததாக விசாரணைக் குழுவிடம் திரு சிங் தெரிவித்திருந்தார். இதை ரயீசா கான் நேற்று முன்தினம் மறுத்தார்.
தாம் உண்மையைப் பேசுவதாகவும் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பொய் கூறப்போவதில்லை என்றும் நேற்று ஒரு மணி நேரத்துக்கு நடைபெற்ற விசாரணையின்போது ரயீசா கான் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பொய் கூறியது தொடர்பான
விசாரணை நடத்தப்படுகிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருடன் தாம் காவல் நிலையத்துக்குச் சென்றிருந்ததாக ரயீசா கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
காவல் அதிகாரிகள் கேட்ட முறையற்ற கேள்விகளால் அப்பெண் கண்ணீர்விட்டு அழுததாக அவர் கூறினார். ஆனால் கடந்த மாதம் 1ஆம் தேதியன்று தாம் பொய் கூறியதை அவர் ஒப்புக்கொண்டார்.
பொய் சொன்னது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதிக்குள் பாட்டாளிக் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று பொய் கூறியதை
ஒப்புக்கொள்ளாமல் அதைத் தொடர்ந்தால் தம்மைப் பற்றி
தவறாக நினைக்கப்போவதில்லை என்று திரு சிங் கூறியதாக ரயீசா கான் தெரிவித்தார்.
இதைத் திரு சிங் மறுத்தார். அக்டோபர் 3ஆம் தேதியன்று ரயீசா கானைச் சந்தித்தபோது பொய் கூறியதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக அவரிடம் தாம் கூறியதாக திரு சிங் கூறினார்.
உண்மையைக் கூற வேண்டும் என்பதே அதற்குப் பொருள் என்று இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 3ஆம் தேதி நடந்த சந்திப்பின்போது வேறு யாரும் அங்கு இல்லை என்று ரயீசா கான் கூறியது அதிர்ச்சி அளிப்பதாக திரு சிங் தெரிவித்தார்.
அன்றிரவு நடந்த சந்திப்பின்போது ரயீசா கானின் குடும்பத்தினர் அனைவரும் அங்கு இருந்ததாக அவர் கூறினார்.
அந்தச் சந்திப்புக்கு மறுநாள் இந்த விவகாரம் குறித்து ரயீசா கான் நாடாளுமன்றத்தில் மீண்டும் பொய் கூறினார். அப்போது அவர் சட்ட, உள்துறை அமைச்சர்
கா. சண்முகம் கேட்ட கேள்வி
களுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிங்கிடம் கேட்டு ரயீசா கான் அப்போது குறுந்
தகவல் அனுப்பினார். இந்தக் குறுந்தகவல் பற்றி திரு சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது ரயீசா கான் உண்மையைப் பேச வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக இருந்ததாக அவர் பதிலளித்தார்.
ஆனால் இதுகுறித்து நேற்று முன்தினம் விசாரணைக் குழு
விடம் பேசிய ரயீசா கான், அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாததால் திரு சிங்கிற்குக் குறுந்தகவல் அனுப்பியதாகக் கூறினார்.
"சொன்னதையே திரும்பச் சொல்லக் கூறுவார் என்று நினைத்தேன். அதற்கு முதல் நாள் இரவு அதைத்தான் அவர் என்னிடம் தெரிவித்தார்," என்று ரயீசா கான் கூறினார்.
அனுப்பிய குறுந்தகவலுக்குத் திரு சிங் பதிலளிக்காதபோது, அவர் கூறியது போல தாம் தொடர்ந்து பொய் சொன்னதாக ரயீசா கான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பொய் சொல்ல தாம் தூண்டியதாக ரயீசா கான் கூறுவது முற்றிலும் பொய் என்று திரு சிங் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் 4ஆம் தேதிரயீசா கான் நாடாளுமன்றத்தில் மீண்டும் பொய் கூறியதை அடுத்து, அவரிடம் தாம் கடிந்துகொண்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பாட்டாளிக்
கட்சித் தலைவர்கள் தம்மை வர்ணிப்பது முறையல்ல என்றார் ரயீசா கான். பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு எனும் பாதிப்பு தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தமக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர் கூறியதாகக் கடந்த மாதம் 29ஆம் தேதியன்று பாட்டாளிக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் ரயீசா கான் தெரிவித்திருந்தார்.
ஆனால் அப்போது தமக்கு
அந்தப் பாதிப்பு இருந்ததாகத் தாம் கூறவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே, பொய் கூறத் தூண்டும் மிக மோசமான மனநல பாதிப்பால் ரயீசா கான் பாதிப்
படையவில்லை என்று விசாரணைக் குழுவிடம் மனநலக் கழகத்தின் தடயவியல் மனநலப் பிரிவின் தற்காலிகத் தலைவர் டாக்டர் கிறிஸ்டஃபர் சியோக் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
சுயமாகச் சிந்தித்து நாடாளுமன்றத்தில் பேசும் ஆற்றல் அவருக்கு இருப்பதாக டாக்டர் சியோக் கூறினார். ரயீசா கானின் சம்மதத்துடன் இம்மாதம் 17ஆம், 20ஆம் தேதிகளில் அவரை டாக்டர் சியோக் மதிப்பீடு செய்தார்.

