காலணிகளை மறுவிற்பனை செய்யும் 26 வயது மெங் ஃபான்ஷுவென், புத்தம் புதிய 'ஸ்னீக்கர்' வகை காலணிகள் எப்போது வெளியிடப்படும் என்ற ரகசியத் தகவல்களை அறிந்திட 'ஃபூட் லாக்கர் சிங்கப்பூர்' நிறுவன ஊழியர் ஒருவருக்கு 22 முறை கையூட்டு வழங்கியதாகக் கூறப்பட்டது.
ஊழியருக்கு மெங் கிட்டத்தட்ட $5,700ஐ லஞ்சமாகக் கொடுத்திருந்தார் என்று அறியப்படுகிறது.
புதிய வெளியீடுகள், விலைக் கழிவுகள் தொடர்பான ரகசியத் தகவல்களை மெங் அறிந்துகொண்டதால் மறுவிற்பனைச் சந்தையில் அவருக்குச் சாதக நிலை ஏற்பட்டது.
இவ்வகை காலணிகளை அவர் விற்றதன் மூலம் சுமார் $6,000 சம்பாதித்தார். குற்றம் நடந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் நிரந்தரவாசியான மெங், முழுநேர தேசிய சேவையாளராக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டது.
மொத்தம் $5,681ஐ கையூட்டாக தந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு நேற்று $20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சீன நாட்டவரான மெங், 2008ஆம் ஆண்டிலிருந்து 'ஸ்னீக்கர்' வகை காலணிகளைச் சேகரித்து வந்தார். 2019ஆம் ஆண்டில் 'நைக்கி ஸ்னீக்கர்' காலணிகளை மறுவிற்பனை செய்து $29,000 லாபம் ஈட்டியதை அடுத்து மறுவிற்பனை செய்யும் தொழிலில் முழுமையாக இறங்கினார்.
அந்த விற்பனைக்குப் பிறகு 'ஸ்னீக்கர்' காலணிகளைத் தேடிப் பிடித்து அவற்றை விற்க முயன்றார். இவரின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் 'ஃபூட் லாக்கர்' கிளை ஊழியர் ஒருவரை மெங் கடந்த ஆண்டு அணுகி காலணி தொடர்பில் ரகசிய தகவல்களைத் தனக்குத் தெரிவித்தால் லாபத்தில் ஒரு பங்கு தருவதாகக் கூறினார்.
புதிய காலணிகள் பற்றி 'ஃபூட் லாக்கர்' ஊழியர்கள் முதலில் அறிவர் என்பதால் மெங் அவரை அணுகியதாகக் கூறப்பட்டது.

