திமத்தி டேவிட் சக்தி மேகனா
நீல் ஜேசன் குடும்பத்திற்கு மனநிறைவு அளிக்கும் ஒரு கொண்டாட்டமாக இவ்வாண்டு கிறிஸ்மஸ் அமைந்துள்ளது. தங்களின் பாதையில் இடையிட்ட பல சவால்களை நீல் ஜேசன், ரேச்சல் சாமுவேல் தம்பதி கடந்து வந்ததும் இல்லாமல் இன்று அழகான ஐந்து மாதப் பெண் குழந்தை ஒன்றும் அவர்களின் கைகளில் தவழ்கிறது.
கப்பல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் 44 வயது நீல் ஜேசன், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் உதவி மேம்பாட்டு பங்காளியாகப் பொறுப்பு வகிக்கும் 36 வயது ரேச்சல் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்தது.
ஓர் இன்ப அதிர்ச்சி
கடந்த ஆண்டு அவர்கள் முக்கியமான ஒரு முடிவை எடுத்தனர். மருத்துவரை நாடி 'ஐவிஎஃப்' எனப்படும் செயற்கை முறையில் கருத்தரிக்கும் முயற்சிக்கு அவர்கள் தயாரானார்கள்.
அதற்குத் தேவையான சிகிச்சையையும் செய்துகொள்ள அவர்கள் ஏற்பாடு செய்யத் தொடங்கினர். ஆனால் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்னரே இவ்வாண்டு ஜனவரியில் அவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
ரேச்சல் சுயபரிசோதனைக் கருவி வழி சோதித்துப் பார்த்தபோது தாம் கருவுற்றிருப்பதை அறிந்தார். பரிசோதனை முடிவு சரிதானா என்று கணவரையும் அருகில் அழைத்துப் பார்க்கச் சொன்னார். அன்று இருவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்து இறுகக் கட்டியணைத்துக்கொண்ட இன்பமான தருணத்தை நினைவுகூர்ந்தனர் அத்தம்பதியர்.
செயற்கை முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க மனதளவில் தயாரானவர்களுக்கு இயற்கையாகவே குழந்தைப்பேறு கிடைத்ததை இறைவன் தந்த வரமாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.
29 வாரங்களில் பிரசவம்
இருப்பினும், அவர்களுக்கு அடுத்த சோதனை காத்திருந்தது.
அவர்களின் மகள் 29 வாரங்களில் குறைப்பிரசவத்தில் பிறந்தாள்.
திடீரென ஒருநாள் ரேச்சலின் நீர்ப்பை கசியத் தொடங்கியது. பத்து நாள்களுக்கு ரேச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
தமது முழுநேர வேலையில் இருந்து இன்னும் விடுப்பு எடுக்காதது ஒரு புறம் இருக்க, தமது பணிகளை முறையே சக ஊழியர்களிடம் அவர் இன்னும் ஒப்படைக்கவும் இல்லை. மருத்துவமனையில் இருந்தவாறு ரேச்சல் தமது பணிகளைச் செய்தார்.
இதற்கிடையே, தங்களின் புதிய இல்லத்தில் அவர்கள் குடியேறிக் கொண்டிருந்தார்கள். புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இரண்டு மாடியுடைய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 'மேஷனட்' வீட்டை மறுவிற்பனைச் சந்தையில் வாங்கி அதைப் புதுப்பித்திருந்தார்கள்.
குழந்தை பிறக்க இன்னும் நாள் உள்ளது என்று தேவையான எந்த பொருளையும் வாங்காத நிலை வேறு. இப்படி திடீரென ஏற்பட்ட நீர்ப்பைக் கசிவு, குழந்தைப் பிரசவத்தில் முடியும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மருத்துவர்கள் முடிந்தவரை கர்ப்பப் பையிலேயே குழந்தையை வைத்திருக்க முயற்சி செய்தனர். ஆனால் எப்படியோ சுகப் பிரசவத்தில் பிறந்தாள் பெத்தனி ஜெனல் ஜேசன். இருப்பினும் பிறந்த உடனேயே தாயிடமிருந்து பெத்தனி பிரிக்கப்பட்டாள்.
பெத்தனி 29 வாரம் மட்டுமே தாயின் கருவறையில் இருந்ததால் இன்னும் மூன்று மாதப் பிரசவக் காலத்திற்கு ஈடுகட்ட பல வாரங்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரேச்சலின் அரவணைப்பு அறியாமலேயே மூன்று வாரங்கள் கடந்தன.
மூன்று வார வேதனை
ஆனாலும் புதிதாகப் பெற்றோர் ஆகிய நீல் ஜேசன், ரேச்சல் தினமும் மருத்துவமனைக்குச் சென்று பெத்தனியைப் பார்த்து வந்தனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழல் என்பதால் அவர்கள் தினமும் பரிசோதனை மேற்கொண்டுதான் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடும் இருந்து வந்தது.
கண்ணாடி அறைக்குள் சிறிய 'இன்குபேட்டர்' பெட்டிக்குள் உள்ளங்கை அளவில் இருந்த தங்களின் குழந்தை, பல்வேறு குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த காட்சியை மறக்கவே முடியாது என்றார் அந்தத் தாய். பிரார்த்தனை செய்து கனத்த நெஞ்சத்துடன் கண்ணில் நீருடன் வீடு திரும்பிய நாள்களை அவர்கள் வருணித்தனர்.
மூன்று வாரங்கள் கழித்து தாதியரின் உதவியுடன் முதன்முதலில் தம்முடைய மகளை நெஞ்சில் சுமக்க ரேச்சலுக்கு வாய்ப்பு கிடைத்தது. நாளுக்கு ஒரு மணி நேரம் அவ்வாறு தூக்கிக்கொண்டபின் மீண்டும் குழந்தையைத் தாதியர் தூக்கிச் சென்றுவிடுவார்.
குழந்தை பிறந்த பிறகும் மற்ற பெற்றோரைப் போல் அதை வீட்டுக்குக் கொண்ட செல்ல முடியாமல் வெறுங்கையாக திரும்பியது தம்மைப் பெரிதும் வருத்தியதாக ரேச்சல் பகிர்ந்துகொண்டார்.
இனி எல்லாம் சுகமே
திருமணமாகி நான்கு ஆண்டு நிறைவைத் தம்பதியர் கொண்டாடுவதற்கு இரு தினங்கள் முன்னதாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு முதல்முறையாக வந்தார் மகள் பெத்தனி.
புது வீட்டிற்கு வந்த அந்தச் செல்லக் குழந்தையே நீல் ஜேசன், ரேச்சல் தம்பதிக்கு இவ்வாண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமானாள்.
அடுத்தடுத்து வந்த சவால்களைச் சமாளித்து, இந்த கிறிஸ்மசுக்குத் தங்களின் புதிய இல்லத்தில் அழகான கிறிஸ்மஸ் மரம் ஒன்றைத் தம்பதியர் வைத்துள்ளனர்.
தங்களின் மகளுக்காக நிறைய பரிசுப்பொருள்களையும் அந்த மரத்தின் கீழ் வைத்துள்ளனர்.
இவ்வாண்டு கிறிஸ்மஸ் பண்டிகையைப் போல் இனிவரும் அனைத்து கிறிஸ்மஸ் தினங்களும் நம்பிக்கை அளிப்பதாக அமையும் என்று இறைவனுக்கு நன்றி கூறி கொண்டாடும் இத்தம்பதிக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

