கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலில் கிறிஸ்மஸ், இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் தமிழர்கள் பராமரிக்கும் திருச்சபைகளில் சமய உணர்வும் சமூக உணர்வும் கட்டிக் காக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டாலும் அதில் புதியவர்களைச் சேர்ப்பதற்கான இடங்களை ஒதுக்க முடிந்ததில் அங் மோ கியோ தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் போதகர் ஆர் பிரபு, 68, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"கடந்த வாரத்தின்போது நாங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளுக்கும் எங்கள் திருச்சபையைச் சேர்ந்த வசதிகுறைந்தோரின் வீடுகளுக்கும் சென்று பொருளுதவி செய்தோம்.
"செங்காங் சமூக மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுக்கு நாங்கள் நன்றி கூறி அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினோம். சிரமத்தில் இருக்கும் பணிப்பெண்களுக்கும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன," என்று திரு பிரபு தெரிவித்தார்.
தன்முனைப்புப் பேச்சுகளும் விளையாட்டுகளும் இடம்பெற்ற மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆலயம் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கடந்த 22 ஆண்டுகளாகப் போதகராகப் பணியாற்றிவரும் திரு பிரபு குறிப்பிட்டார்.
கிறிஸ்மஸ் தின காலையன்று இவ்வாண்டு தடுப்பூசி போடப்பட்டுள்ள 200 பேர் வரை தேவாலயத்திற்கு நேரில் வருவதற்கு அனுமதி இருப்பதாக திரு பிரபு கூறினார். அனைவரும் ஒன்றுகூடி சாப்பிட முடியவில்லை என்ற ஏக்கம் சபை உறுப்பினர்களுக்கு இருந்தாலும் பிறருக்கு உணவு வழங்கும் சேவை நிறைவு அளிப்பதாக அவர் கூறினார்.
இவ்வாண்டு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நிலவினாலும் அதனை ஏற்கும் பக்குவம் பலருக்கு ஏற்பட்டிருப்பதால் இம்முறை கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் தொடங்கியதாக செயிண்ட் ஆண்ட்ரூஸ் பேராலயத்தின் போதகர் ஜோஷுவா ராஜ், 53, தெரிவித்தார்.
"இறையன்பாலும் சபை உறுப்பினர்கள் மீதான அதீத அக்கறையாலும் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள், புத்தாக்க முறைகளைக் கையாண்டு இணையச் செயலிகளின் மூலம் மக்களைப் பிரார்த்தனை நிகழ்வுகளில் ஈடுபடுத்தினர்," என்று திரு ஜோஷுவா கூறினார்.
இந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள வாடகை வீட்டுவாசிகளுக்குத் தேவாலய உறுப்பினர்கள் உதவியும் உள்ளதாக திரு ஜோஷுவா தெரிவித்தார்.
வீட்டுக்குத் தேவையான பொருள்களை உறுப்பினர்கள் நன்கொடை அளித்து, அவற்றைப் பொட்டலங்கட்டி வீடுகளுக்கு விநியோகமும் செய்தனர் என்றார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று 500 பேர் நேரடியாகவும் 1,000 பேர் மெய்நிகர் வழியாகவும் பங்கேற்பதாக அவர் கூறினார்.
"தேவாலய வளாகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு மக்கள் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வசதி உள்ளது," என்று அவர் கூறினார்.
செய்தி: கி.ஜனார்த்தனன், திமத்தி டேவிட்

